மன்னார், பெரியமடுவை பிறப்பிடமாகக் கொண்ட Dr.A.L.தஸ்தகீரின் மறைவு கவலை தருவதாகவும் அவரது மறைவு மக்களுக்கு பாரிய இழப்பாகும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அனுதாபச் செய்தியில்,,,
"சுமார் 40 வருடங்களாக கொழும்பு, வாழைத்தோட்டப் பிரதேசத்தில் வைத்தியராகப் பணியாற்றி வந்த மர்ஹும் Dr.தஸ்தகீர், கொழும்பு மாவட்ட மக்களுக்கு மாத்திரமின்றி மன்னார், வவுனியா உட்பட இதர பிரதேசங்களில் வாழும் அனைத்து மக்களுக்கும் எந்தவித பேதமுமின்றி வைத்தியப் பணியாற்றி வந்தவர். 
சிறந்த சமூக சேவையாளரான இவர், கொழும்பு, வாழைத்தோட்ட பிரதேசத்தில் பிறப்பு இறப்பு பதிவாளராக இருந்து, அந்தப் பிரதேச மக்களின் பணிகளை இலகுபடுத்தியவர். மக்களின் வேண்டுகோள்களை துரிதகதியில் நிறைவேற்றி, அவர்களுக்கு அளப்பரிய சேவைகளைச் செய்தவர்.
அனைத்து சமூகத்தினராலும் மதிக்கப்பட்ட, மனித நேயம் படைத்த மர்ஹும் Dr.தஸ்தகீர், எல்லோருடனும் அன்பாகவும் சிரித்த முகத்துடனும் பழகக்கூடிய நற்குணங்களைக்கொண்ட பண்பாளர். அத்துடன், சமூகப் பணிகளுக்காக தமது சொந்த நிதியையும் வழங்கிய இவர், ஒரு சிறந்த வைத்தியராக செயற்பட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
அன்னாரின் இழப்பினால் துயருறும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு  ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதோடு, எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது நற்கருமங்களையும் சேவைகளையும் பொருந்திக்கொண்டு, அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா எனும் உயர்ந்த சுவனத்தை வழங்குவானாக! என்றும் பிரார்த்திக்கின்றேன்" என்று தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.