உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று சனிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. அத்தோடு கட்டுப்பணத்தை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் நேற்று வெள்ளிக்கிழமையுடன் (20) நிறைவடைந்தன. 


கடந்த புதன்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று நண்பகல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.


அதற்கமைய இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நண்பகல் 12 மணி முதல் 1.30 வரையான ஒன்றரை மணித்தியாலங்கள் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கான காலமாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.


ஆட்சேபனை தெரிவிப்பதற்கான காலம் நிறைவடைந்ததன் பின்னரே தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் , இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


அதற்கமைய இன்றைய தினம் தேர்தலுக்கான தினம் குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.