சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து, சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் விராட் கோலி, முந்தைய தலைமுறையின் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படுகிறார். சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசியுள்ள நிலையில், அவரது சத சாதனையை விராட் கோலி (74 சதங்கள்) முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலி ஒப்பிடப்படும் நிலையில், வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிடக்கூடாது என்ற கருத்தும் உள்ளது. 1970-80களில் கவாஸ்கர், 1990-2000ம் ஆண்டுகளில் சச்சின் டெண்டுல்கர், சமகாலத்தில் விராட் கோலி என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தலைசிறந்த வீரர்கள் இருந்திருக்கின்றனர். 


ஆனால் வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிடக்கூடாது. ஏனெனில் அப்போது இருந்த கிரிக்கெட் விதிகள், தொழில்நுட்பங்கள் இப்போது அப்டேட் ஆகிவிட்டன. கிரிக்கெட் காலத்திற்கேற்ப மாறிவரும் நிலையில், மேலும் டி20 கிரிக்கெட் அறிமுகமான பின், ஆட்ட அணுகுமுறையும் மாறிவிட்ட சூழலில், முந்தைய தலைமுறை வீரர்களுடன் சமகால வீரர்களை ஒப்பிட முடியாது.


சச்சின் டெண்டுல்கர் - விராட் கோலி ஒப்பீடு தொடர்ந்து வரும் நிலையில், அதுகுறித்து பேசிய கபில் தேவ், ஒவ்வொரு தலைமுறையிலும் கிரிக்கெட் வீரர்கள் மேம்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எங்கள் காலத்தில் சுனில் கவாஸ்கர், அடுத்த தலைமுறையில் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் சிறந்த விளங்கினார்கள். இப்போது ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய வீரர்கள் சிறந்து விளங்குகிறார்கள். அடுத்த தலைமுறையில் இன்னும் சிறந்த வீரர்கள் வருவார்கள். அவர்கள் ரோஹித், கோலியைவிட பயங்கரமாக ஆடுவார்கள் என்று கபில் தேவ் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.