இந்தியா மீது தண்ணீர் போர் தொடுக்க தயார் ஆகும் சீனா


இந்திய எல்லைப் பகுதியில் பாயும் ஆற்றில் மாபெரும் அணையை எழுப்பி இந்தியாவுடன் தண்ணீர் போரைத் தொடங்க சீனா திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா, நேபாளம், சீனா ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் எல்லைப் பகுதியில் சீனா புதிதாக பிரம்மாண்ட அணைக்கட்டு அமைப்பதற்கான கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கிறது. இந்த அணை மூன்று நாட்டு எல்லைக்கு மிக அருகே பாயும் மப்ஜா சாங்போ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வருகிறது.

நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டுவைச் சேர்ந்த எபர்டஃபாஸ் செய்தி நிறுவனம் ஒன்று இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ளது. சீனா அணை கட்டும் இடம் உத்தராகண்ட் மாநிலத்தின் காலாபாணி என்ற இடத்துக்கு மிக அருகில் உள்ளது என்று சாட்டிலைட் காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

அணைக்கட்டு மட்டுமின்றி, இதே பகுதியில் சீனா ஒரு விமான நிலையமும் கட்டிக்கொண்டிருக்கிறது. பணிகள் நிறைவு பெற்றதும் அந்த விமான நிலையம் சீன விமானப்படையின் பயன்பாட்டுக்கு விடப்பட வாய்ப்பு உள்ளது.

ஏற்கெனவே அருணாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு மிக அருகில், பிரம்ம்புத்திரா ஆற்றின் துணை ஆறான யார்லுங் சாக்போவில் ஒரு மாபெரும் அணையை சீனா கட்டத் தொடங்கிவிட்டது. அந்த அணை அருணாச்சலுக்கு மிக அண்மையில் உள்ள மெடாக் எல்லைப்பகுதியில் கட்டப்படுகிறது. இந்த அணையின் மூலம் பிரம்மபுத்திரா நதியின் போக்கையே திசைமாற்ற சீனா திட்டம் போடுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

பிரம்மபுத்திரா நதி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டுமில்லாமல் வங்கதேசத்துக்கும் உயிர்நாடியாக விளக்குகிறது. சீனா அந்த ஆற்றை திசை மாற்றினால் வடகிழக்கு மாநிலங்களில் பஞ்சம் ஏற்படும் அல்லது அருணாச்சல், அசாம் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகள் நீருக்குள் மூழ்கும் வாய்ப்பு உள்ளது.

தொடர்ந்து இந்திய திபெத் எல்லைப்புறங்களில் பெரிய பெரிய அணைக்கட்டுகளை எழுப்பிக்கொண்டிருக்கும் சீனா, எதிர்காலத்தில் இந்தியாவுடன் தண்ணீர் போரைத் தொடங்குவதற்கு ஆயத்தமாகிறது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் ஆசியாவின் முக்கிய ஆற்றுப்பகுதிகளில் சுற்றுச்சூழல் சீர்குலைவு உண்டாகும் என்றும் சர்வதேச அரசியல் நோக்கர்கள் சீனாவை விமர்சிக்கின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.