முன்னணி சர்வதேச பாடசாலை ஒன்றின் முகாமையாளர் ஓட்டிச் சென்ற சொகுசு கார் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய நபராவார்.

கிராண்ட்பாஸ் பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் வி. ஜெகநாதன் என்பவரும் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

இன்று (27) காலை தெமட்டகொட பேஸ்லைன் வீதியில் ஒருகொடவத்தை சந்திக்கு அருகில் அவிசாவளை வீதியை நோக்கிச் செல்வதற்காக பொரளையில் இருந்து வந்த சந்தேகநபர் ஓட்டிச் சென்ற கார், போக்குவரத்து விளக்குகள் எரியும் வரை நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களின் பின்பகுதியில் மோதியுள்ளது.

அதேநேரம் மோட்டார் சைக்கிள் சுமார் நாற்பது மீற்றர் முன்னோக்கி சரிந்து போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.