சுற்றுலா சென்ற 21 பேர் ஹட்டனில் கைது

போதை பொருட்களுடன் ஹட்டன் வீதியூடாக சுற்றுலா வந்த 21 பேர் ஹட்டன் கோட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கடந்த (11) ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் சிவனொளிபாதமலை நுவரெலியா உள்ளிட்ட பிரதேசங்களுக்கு அதிகமான சுற்றுலா பிரயாணிகள் வருகை தந்தனர்.

இவ்வாறு வருகை தந்த சுற்றுலா பிரயாணிகளை ஹட்டன் மோப்ப நாய் பிரிவின் ஸ்டூவட் என்ற மோப்ப நாயின் உதவியுடன் வாகனங்களை பொல்பிட்டிய மற்றும் கினிகத்தேனை பகுதிகளில் சோதனை செய்த போது இவர்களிடமிருந்து சட்டவிரோத சிகரட்டுக்கள், கேரளா கஞ்சா, ஹெரோயின், போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் இந்த போதை பொருட்கள் வைத்திருந்த நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் வென்னப்புவ கொழும்பு சிலாபம் உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தேக நபர்கள் மற்றும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் இன்று (12) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சோதனை நடவடிக்கையினை ஹட்டன் பொலிஸ் கோட்டத்தின் பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கமைய ஹட்டன் கோட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரேமலால் அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதே வேளை கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் விச போதைப்பொருட்கள் வைத்துக்கொண்டு சுற்றுலா சென்ற சுமார் 39 பேர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-மலையக நிருபர் சுந்தரலிங்கம்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.