பாகிஸ்தானுக்கு 700 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் சீனா
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகின்ற நிலையில் உணவு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் பாகிஸ்தான் மக்கள் பாரிய பேராபத்தை எதிர்க்கொண்டு வருகின்றனர்.
பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் மத்திய வங்கி திணறி வருகின்றது. மேலும், கையிருப்பு டொலர்களும் குறைந்து வருவதால் பாகிஸ்தான் திவால் நிலையை எட்டிவிட்டது.
அதேவேளை, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது. 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு பல்வேறு விதிகளை விதித்துள்ளது.
கடனை பெற சர்வதேச நாணய நிதியம் விதித்த விதிகளை பின்பற்ற பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்க சீனா முன்வந்துள்ளது.
700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தை சீனா பாகிஸ்தானுக்கு வழங்கவுள்ளது. இதற்கான ஒப்புதலை சீன அரசு வழங்கியுள்ளது. சீனா கடனாக வழங்கும் இந்த பணம் இந்த வாரத்திற்குள் பாகிஸ்தான் மத்திய வங்கியில் செலுத்தப்படவுள்ளது.