அனைத்து சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரம், கொடுப்பனவுகள் அதிரடியாக குறைப்பு

சுகாதார அமைச்சின் மருத்துவர்கள் மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களின் மேலதிக நேரம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் 15 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த விடுத்துள்ள அறிக்கையின்படி, பொது செலவினங்களின் முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ், மேலதிக நேரம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் 15 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன.

இது தவிர, எதிர்வரும் நாட்களில் வைத்தியசாலைகள் தவிர மற்ற சுகாதார அலுவலகங்களை மூடி வைக்குமாறும், பாதுகாப்பு மற்றும் துப்புரவு செலவுகளை 10 சதவீதம் குறைக்குமாறும், நிறுவனங்களின் தலைவர்களுக்கு சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் நிறைவேற்று தர உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் விடுமுறை ஊதியம் மாதத்திற்கு 5 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும், தேவையற்ற மின் விளக்குகளை அணைக்கவும், தண்ணீர், எரிபொருள், தொலைபேசி மற்றும் எழுதுபொருட்களின் பயன்பாட்டை குறைக்கவும் அவர் குறித்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார்.

நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், தேவைப்பட்டால், சுகாதார செயலாளரின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

இதேவேளை சுகாதார ஊழியர்களின் வேதனத்தை 15 வீதத்தினால் குறைக்கும், சுகாதார செயலாளரினால் கையொப்பமிடப்பட்ட சுற்றறிக்கையை சுகதார அமைச்சு உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும். இல்லையேல் பாரிய தொழிற்சங்க போராட்டம் வெடிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் டொக்டர் வாசன் இரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.