உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மீதான மனு ஒத்திவைப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேணல் ஒருவர் சமர்ப்பித்த ரிட் மனு இன்று (23) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசேடமாகக் கருதி எஸ். துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிதமன்ற நீதியரசர் குழு முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், ஓய்வுபெற்ற கேணல் டபிள்யூ.எம். விஜேசுந்தர இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, பெப்ரவரி 22 ஆம் திகதி தபால்மூல வாக்களிப்பு ஆரம்ப தினமாக கருதப்பட்டபோதிலும் அது காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதால் குறித்த வழக்கை திட்டமிட்டபடியே இம்மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என அறிவித்தார்.

அத்துடன் விசேட வழக்காக கருதி நிர்ணயிக்கப்பட்ட திகதிக்கு முன்னதாகவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென முன்வைத்த கோரிக்கை மனுவை வாபஸ் பெறுவதாகவும் மன்றில் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.