ஆப்பிரிக்காவை தாக்கிய பிரெடி புயல் 190 பேர் பலி- 584 பேர் படுகாயம்

 கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மலாவி. அந்நாட்டில் பிரெடி என்ற பருவகால சூறாவளி புயலால் தெற்கு பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

 தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீச கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதுபற்றி மலாவியின் இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சு வெளியிட்ட ஊடக அறிக்கையில், தெற்கு மலாவியில் பல்வேறு மாவட்டங்களின் பெரும் பகுதி சூறாவளி தாக்கத்தினால் பாதிக்கப்படும். 

இதனால், பெரு வெள்ளம் ஏற்படும். பாதிப்பு ஏற்படுத்த கூடிய அளவுக்கு காற்றின் வேகம் இருக்கும் என அதுபற்றிய அமைச்சின் அறிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

 இதற்கேற்ப சூறாவளி புயலால் நேற்று பரவலாக பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தெற்கு மலாவியில் நிலைமை இன்று மோசமடைந்துள்ளது என பேரிடர் மேலாண் விவகார துறை தெரிவித்துள்ளது. 

 அந்த அறிக்கையில், இன்று நிலைமை மோசமடைந்து, எண்ணற்ற பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. 

 சாலைகள் மற்றும் பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. தெளிவற்ற வானிலையும் காணப்படுகின்றது. இதேபோன்று, பல இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

 நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகின்றது என அந்த துறைக்கான ஆணையாளர் சார்லஸ் கலேம்பா கூறியுள்ளார். 

 இந்த சூறாவளி தாக்கத்தினால் இதுவரை 190 பேர் உயிரிழந்துள்ளனர். 584 பேர் காயமடைந்துள்ளனர். 37 பேரை காணவில்லை என கூறப்படுகின்றது. 

 தெளிவற்ற வானிலையால் மீட்பு பணியும் பாதிக்கப்பட்டுள்ளது என சி.என்.என். தெரிவிக்கின்றது. 

 நிலைமை நாளை சீரடைய கூடும். சூறாவளி கடந்து சென்று விடும் சாத்தியம் உள்ளது. ஆனால், இன்று நிலைமை படுமோசமாகவுள்ளது. கனமழையும், வெள்ளமும் காணப்படுகின்றது என கலேம்பா கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.