வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் தொடர்ந்தும் தாமத நிலை  ஏற்பட்டுள்ளது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்படும் என அரசாங்க அச்சக தலைவர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

வாக்குச் சீட்டுக்களை அச்சிட தேவையான பணம் இன்னும் அரசு அச்சகத்திற்கு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்க அச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அடிப்படைப் பணிகளுக்காக 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலுத்த வேண்டியுள்ளது.எனினும், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக அரசாங்க அச்சகத்திற்கு இதுவரை 40 மில்லியன் ரூபாவே கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகம் கடந்த 8ஆம் திகதி நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளது.எவ்வாறாயினும், குறித்த அறிவித்தல் தொடர்பில் நிதியமைச்சிடம் இருந்து எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என அரசாங்க அச்சக தலைவர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

எனவே, வாக்குச் சீட்டுகளை அச்சிடும் திறன் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனவும், அச்சிடும் பணியை ஆரம்பிக்க குறைந்த பட்சம் 200 மில்லியன் ரூபாவை அரசாங்க அச்சகத்திற்கு கிடைக்க வேண்டும் எனவும் கங்கானி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க அச்சகத்திற்கு அடுத்த வாரத்தில் தொகை கிடைத்தாலும் 20 ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்குகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க முடியாது என அச்சகத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.இதன்படி, தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் திகதி தொடர்பில் நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தபால் வாக்குச்சீட்டுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்காவிட்டால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பை மார்ச் 28 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்படும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.