⏩ உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை வீடமைப்பு உதவித் திட்டத்தின் வீடமைப்புப் பணிகள் தற்போது 50 வீதம் நிறைவடைந்துள்ளன...

⏩ கம்பஹா மாவட்டத்தில் 727 வீடுகள் மற்றும் மினுவாங்கொடை தொகுதியில் 78 வீடுகளின் பணிகள் நிறைவு...


⏩ முடிக்கப்படாத திட்டங்களின் பணிகளை முடிக்க திறைசேரியில் இருந்து 3,750 மில்லியன் ரூபாய்...

"உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” வீடமைப்பு உதவித் திட்டத்தின் 50 வீதமான வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி 2021ஆம் ஆண்டு 12231 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு அதில் 6039 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 2022ஆம் ஆண்டு 1465 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் 25 வீடுகளே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 1215 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அதில் 727 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மினுவாங்கொடை தொகுதியில் மட்டும் 159 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் 78 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு,  "உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம், இந்த வருட ஆரம்பத்தில் வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டன.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, கடந்த வருடங்களில் ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்படாத வேலைத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்காக திறைசேரியினால் 3,750 மில்லியன் ரூபா தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, ,  "உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை ” வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வேலைகளை ஆரம்பித்து பூர்த்தி செய்ய முடியாத அனைத்து வீடுகளையும் கட்டி முடிக்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

உங்களுக்கு வீடு - நாட்டுக்கு நாளை வீடமைப்புத் திட்டம்  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முயற்சியால் 2020 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது சொந்த வீடு இல்லாத குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கானது. இந்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ், இலங்கையிலுள்ள அனைத்து 14022 கிராம சேவைப் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் ஒவ்வொரு கிராம சேவைப் பிரிவுக்கும் ஒரு வீடாக 14022 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டது.

முனீரா அபூபக்கர்                                                                                                              

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.