நெருக்கடியான சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு - IMF மீண்டும் உறுதி!

நெருக்கடியான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு தொடர்ச்சியாக தமது ஒத்துழைப்புகளை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா(Kristalina Georgieva) தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் உலக வங்கி இணைந்து நடத்தும் ஸ்பிரிங் மாநாட்டிற்கு இணையாக இலங்கை தூதுக்குழுவுடன் நேற்று(11) நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் IMF முகாமைத்துவ பணிப்பாளர் Kristalina Georgieva தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோருடனான சந்திப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைவரும் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்படுவது அவசியமானது எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தமது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டங்களை முழுமைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதை முகாமைத்துவ பணிப்பாளரிடம் இதன்போது மீள உறுதி செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடன் நிலைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொள்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களை பூர்த்தி செய்ய இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளதாக இதன்போது இலங்கையின் தூதுக்குழு மீள உறுதி செய்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.