இறக்குமதி முட்டைகள் தொடர்பான அறிவிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சில்லறை சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என அரச பல்நோக்கு வணிக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சில்லறை சந்தைக்கு விநியோகிக்குமாறு பெருமளவான பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருவதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் உள்ளிட்ட முட்டை தொடர்பான துறைகளுக்கு மாத்திரமே விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் முட்டை தேவை குறித்த ஆய்வின் பின்னர் முட்டைகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தீர்மானித்தது.

அதற்கமைய, இந்தியாவில் இருந்து தினமும் ஒரு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.

7 மில்லியன் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தற்போது உள்ளூர் முட்டை உற்பத்தி 4 மில்லியனாக காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இலங்கைக்கு முட்டை இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராய அதிகாரிகள் குழுவொன்று இந்தியா சென்றுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க, இந்தியாவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 02 பண்ணைகளிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.