தினேஷ் ஷாப்டர் – வெளியான புதிய தகவல்!
 


கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் சடலம் மீதான முதற்கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ரொஹான் டி.ருவன்புர தெரிவித்துள்ளார்.
மேலும் டிஎன்ஏ பரிசோதனை மற்றும் அறிக்கைகளுக்காக தினேஷ் ஷாப்டரின் உடல் மாதிரி பாகங்கள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதனால் அந்த அறிக்கைகள் கிடைக்கும் வரை உறுதியான தீர்ப்பை வழங்க முடியாது என்றும் சட்ட வைத்திய துறை பேராசிரியர்கள் கூறுகின்றனர்.
தினேஷ் ஷாப்டரின் பிரேத பரிசோதனை குறித்த முழுமையான அறிக்கையை வெளியிடுவதற்கு இன்னும் 2 மாதங்கள் செல்லும் எனவும்,சடலம் தொடர்பான மேலதிக பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து முதற்கட்ட பரிசோதனை அறிக்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் சட்ட வைத்திய அதிகாரி ரொஹான் டி.ருவன்புர தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உயிரிழப்பு தொடர்பில் தடயவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசேட சட்ட மருத்துவ அதிகாரிகளால், நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஷாப்டரின் சடலம் கடந்த 25 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டது.
பொரளை பொது மயானத்தில் தனது காரில் கை கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் மீட்கப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.