2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கான விண்ணப்ப கால அவகாசம் நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

உயர்தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக, தகுதிவாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து இணையவழி (ஒன்லைன்) விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

 

கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி முதல் நேற்று வரை இதற்காக 6 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது அந்த கால அவகாசம் நாளை (4) வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த காலப்பகுதிக்குள் விண்ணப்பங்களை இணையத்தளம் வழியாக சமர்ப்பிக்க முடியுமென பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

 

பௌதீகவியல் (01), இரசாயனவியல் (02), கணிதம் (07), விவசாய விஞ்ஞானம் (08), உயிரியல் (09), இணைந்த கணிதம் (10), தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் (29), வணிகக்கல்வி (32), பொறியியற் தொழில்நுட்பவியல் (65), உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல் (66), தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் (67) மற்றும் ஆங்கிலம் (73) ஆகிய பாடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரிகள், தமது பிள்ளை அல்லது குடும்ப உறுப்பினர்கள் பரீட்சைக்கு தோற்றியிருப்பின், அவர்கள் தோற்றிய பாடம் அல்லாத ஏனைய பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியுமென பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

மேலும், கடந்த 2022.12. 31 ஆம் திகதிக்கு பின்னர் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் விண்ணப்பிக்க முடிமென தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தகுதிபெற்றவர்கள் https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் கோரியுள்ளார். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.