தெஹிவளை கௌஸிய்யாஹ்வில் இளம் உலமாக்களுக்கு பாராட்டு விழா


   அஸ்ஸெய்யித் ஷெய்க் கோயாத் தங்கள் (அல் காதிரிய்யி, வர்ரிபாஇய்யி) அவர்களின் புனித பொற்கரங்களால் ஸ்தாபிக்கப்பட்ட, தெஹிவளை - அல் ஜாமிஅதுல் கௌஸிய்யாஹ் அரபுக் கலாபீடத்தின் வெள்ளி விழா, 11 ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் 18 ஆவது தலைப்பாகை சூட்டு விழா ஆகிய சிறப்பு நிகழ்வுகள் உள்ளடங்கிய முப்பெரும் விழா, அஸ்ஸெய்யித் ஏ.ஐ. ஹஸன் பூக்கோயாத் தங்கள், அஸ்ஸெய்யித் ஏ.ஐ. ஹுஸைன் பூக்கோயாத் தங்கள் ஆகியோரின் தலைமையின் கீழ், (13) சனிக்கிழமை மாலை 3.45 மணி முதல் அல் ஜாமிஅதுல் கௌஸிய்யாஹ் அரபுக் கலாபீட மண்டபத்திலும், (14) ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி முதல் தெஹிவளை - ஈகல் லேக் சைட் பாதுகாப்புப் படையினரின் வரவேற்பு மண்டபத்திலும் ( Dehiwala - Eagles' Lakeside Banquet & Convention Hall ) வெகு விமர்சையாக இடம்பெற்றன.
   இச்சிறப்பு நிகழ்வுகளில் பிரதம அதிதிகளாக, அஸ்ஸெய்யித் நகீப் மௌலானா, அஸ்ஸெய்யித் நஜீப் மௌலானா மற்றும் கௌரவ அதிதிகளாக அல் ஜாமிஅதுல் கௌஸிய்யாஹ் தலைவர் அல்ஹாஜ் எம்.எச். ஹாஜா ஹுஸைன், அஸ்ஸெய்யித் ஏ.ஐ. அனீஸ் பூக்கோயாத் தங்கள், அஸ்ஸெய்யித் ஏ.ஐ. உவைஸ் பூக்கோயாத் தங்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
   இந்தியா - தமிழ்நாடு, ஜாமிஆ அல் அன்வாருல் குத்ஸிய்யா அரபுக் கல்லூரியின் துணை முதல்வர் மௌலவி அஃப்ழலுல் உலமா ஜே.எம். ஜைனுல் ஆபிதீன் (மஹ்ழரி) சிறப்புரை ஆற்றிய இச்சிறப்பு நிகழ்வுகள்,  கௌஸிய்யாஹ் கலாபீட நிர்வாகிகள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள்,  ஸாதாத்துமார்கள், முரீதீன்கள், முஹிப்பீன்கள், ஊர்ப்பிரமுகர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெற்றன.
   இம்முப்பெரும் விழாவில், மார்க்கக் கல்வியைக் கற்று உலமாக்களாகப் பட்டம் பெற்றுள்ள (2019) ஆலிம்கள் 6 பேர், (2021) ஆலிம்கள் 15 பேர், (2022) ஆலிம்கள் 16 பேர், (2020) ஹாஃபிழ்கள் 4 பேர், (2021) ஹாஃபிழ்கள் 6 பேர், (2022) ஹாஃபிழ்கள் 11 பேர் சான்றிதழ்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள்  வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டதோடு, மேலும் மாணவர்கள் 6 பேர் தலைப்பாகைகள்  சூடப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
   இதேவேளை, குறித்த இளம் உலமாக்களையும், இளம் ஹாஃபிழ்களையும் கலாபீட அதிபர் அல் ஹாஃபிழ் மௌலவி எம்.எஸ். ரிப்பத் அஹ்மத் - பீ.ஏ., (பாஸில் - ஸகாபி), உப அதிபர் மௌலவி எம். ஆர்.எம். முஹம்மத் றிழ்வான் (கௌஸி), ஹிப்ழ் பிரிவு பொறுப்பாளர்களான அல் ஹாஃபிழ் மௌலவி எஸ். முஹம்மத் அக்பர் (கௌஸி), அல் ஹாஃபிழ் மௌலவி ஜே.எம். தானிஷ் (கௌஸி) உள்ளிட்ட கலாபீட போதனாசிரியர்களினால் வாழ்த்தி மகிழ்விக்கப்பட்டமை விஷேட அம்சமாகும். இம்முப்பெரும் விழா இறுதியில், "அலிப்" சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது. 


( மினுவாங்கொடை நிருபர் )
( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.