சீனாவில் ஹூயிஸ் முஸ்லிம்களும், பெரும் அடக்குமுறைக்கு உள்ளாகுவதாக தெரிவிப்பு


சீனாவில் உய்குர் இன முஸ்லிம்கள் போல் ஹூயிஸ் இன மக்களும் மதத்தின் அடிப்படையில் அடக்குமுறைகளுக்கு உள்ளாகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில்தான் மேற்குப் பகுதியில் உய்குர் மொழி பேசும் முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். சீனாவின் மற்ற மாகாணங்களில் குழந்தைப் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த மாகாணத்தில் மட்டும் கட்டுக்குள் வரவில்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளாக முஸ்லிம்கள், சிறுபான்மைப் பிரிவினர் இடையே குழந்தைப் பேற்றைத் தடுக்க அத்துமீறும் செயல்களில் சீன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று அசோசியேட் பிரஸ் (ஏ.பி.) செய்தி வெளியிட்டது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.




இந்த நிலையில், உய்குர் மக்களை போல் மற்றொரு முஸ்லிம் இனக் குழுவான ஹூயிஸ் மக்களும் மதத்தின் அடிப்படையில் துன்புறுத்துலுக்கு உள்ளாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் இரண்டாவது பெரிய இனக் குழுவான ஹூயிஸ் மக்கள் யுனான் மாகாணத்தில் உள்ள நிங்சியா பகுதியில் வசித்து வருகின்றனர்.



இந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி நிங்சியா பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் மக்கள் தொழுகை நடத்த சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த சீன போலீஸார் அவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவானது. மேலும், மசூதியின் கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.



சீனாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக மத அடிப்படையிலான அடக்குமுறைகளை சீனா ஏவி வருகிறது என்று அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விமர்சித்து வருகின்றன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சீனா மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.