வெலிக்கடையிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற கைதி கைது
சிறைச்சாலை அதிகாரியின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்து வெலிக்கடை சிறையிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற கைதி கைது

சிறைச்சாலை அதிகாரியின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்து வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற கைதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் சமய வழிபாட்டு நிகழ்வொன்றுக்காக இன்று(25) காலை வௌியே அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த கைதி இவ்வாறு சூட்சுமமான முறையில் தப்பிச்சென்றதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சந்தேகித்த சிறைச்சாலை அதிகாரிகள், குறித்த சிறைக்கைதியை பின்தொடர்ந்து சென்று, அவர் மருதானை ரயில் நிலையத்தில் ரயிலொன்றில் ஏறியிருந்த போது கைது செய்து, வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

குறித்த கைதி கம்பஹா மேல் நீதிமன்றத்தில் 2015 ஆம் ஆண்டில் கொலைக் குற்றச்சாட்டொன்றுக்கு அமைய மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

42 வயதான குறித்த கைதி பன்னல பகுதியைச் சேர்ந்தவராவார். 

சம்பவம் தொடர்பில் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் சிறைச்சாலை அத்தியட்சகரின் கீழ், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.