மீண்டும் அதிர்ச்சி..! இரண்டு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து!


இந்தியாவின், மேற்கு வங்கம் மாநிலத்தில் இன்று காலை 2 சரக்கு ரயில்கள் மோதியதில் 12 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் நேரிட்ட ரயில் விபத்தின் தாக்கத்திலிருந்து இன்னமும் தேசம் மீளாத சூழலில், மேற்கு வங்க சரக்கு ரயில் விபத்து அதிர்ச்சியை தந்துள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகர் ரயில் நிலையம் அருகே ஜூன் 2 அன்று, 2 பயணிகள் ரயில்கள் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி தடம்புரண்ட விபத்து நேரிட்டது.

இந்த விபத்தில் பயணிகள் ரயில்களில் பயணித்தவர்களில் 294 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்தின் சுவடு நீங்குவதற்கு முன்பாக, அடுத்த சில வாரங்களிலேயே இன்னொரு ரயில் மோதல் விபத்து நேரிட்டிருக்கிறது.

மேற்கு வங்கம் மாநிலத்தின் பாங்குரா பகுதியில், இன்று (ஜூன் 25) அதிகாலை 2 சரக்கு ரயில்கள் மோதலில் 12 பெட்டிகள் தடம்புரண்டன. சரக்கு ரயில்கள் என்பதால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. சரக்கு ரயில்களின் ஓட்டுநர் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரக்பூர் - பாங்குரா - ஆத்ரா வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், அடுத்த 8 மணி நேரத்தில் அந்த தடத்தில் ரயில் போக்குவரத்து மீளும் என்றும் தென்கிழக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.