கிழக்கு பல்கலைக்கழகத்தின் 9வது சர்வதேச யோகாதினத்தையொட்டிய 4 நாள் நிகழ்வுகள்

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக சித்த மருத்துவ பீடமும், தொழிற்துறை மற்றும் சமூக இணைப்பு மையத்தின் அலகும் இணைந்து நடாத்திய 9வது சர்வதேச யோகாதின நிகழ்ச்சித்திட்டங்களை கடந்த 4 நாட்களாக முன்னெடுத்திருந்தது. 

இந்நிகழ்ச்சிகளை சுவாமி விவேகானந்தா கலாசார மையம், கொழும்பு இந்திய உயர் ஸ்தானிகராலயம், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம், TRINCO AID, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் போன்றவை இந்த 9வது சர்வதேச யோகாதின நிகழ்வுகளை சிறப்பிக்க பல வகையில் ஒத்துழைப்புக்களை வழங்கியது. 

இதன் முதல்நாள் நிகழ்வாக, யோகா விழிப்புணர்வு பற்றிய நிகழ்ச்சித்திட்டத்தை திருகோணமலை பிரதேச சபை காரியாலயத்தில் நடாத்தியது. இரண்டாம் நாள் யோகா பற்றிய விழிப்புணர்வுடன் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனியின்போது பொதுமக்களின் ஆரோக்கிய வாழ்வை யோகாவின் மூலம் மேம்படுத்தலாம் என்ற குறிக்கோளை முன்வைத்து இடம்பெற்றது.  

மூன்றாவது நாள் நிகழ்வாக, திருகோணமலை வளாக ஒன்றுகூடல் மண்டபத்தில் சித்த மருத்துவபீட மாணவர்களினால் நடாத்தப்பட்ட யோகா ஆற்றுகை தொடர்பான பல நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கமும், சிறப்பு விருந்தினராக இந்திய உயர் ஸ்தானிகராலய கலாசார பிரிவு இயக்குனர் பேராசிரியர் அங்குரன் டக்தாவும், கௌரவ விருந்தினராக திருகோணமலை வளாக முதல்வர் பேராசிரியை சந்திரவதனி தேவதாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

நான்காம் நாள் இறுதி நிகழ்வாக, திருகோணமலை தடுப்பு சிறை உத்தியோகர்களுக்காக நடாத்தப்பட்ட யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சியில், யோகாவின் மூலம் ஆரோக்கிய வாழ்வினை மேம்படுத்துதல் என்ற விழிப்புணர்வுகளை வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

(அபு அலா)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.