உலக கிண்ணத்தை வெல்வதே எங்கள் நோக்கம்


13 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி முதல் நவம்பர் 19ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வங்காள தேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்ற போட்டிக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப் பட்டது.

அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 10 நகரங்களில் போட்டிகள் நடைபெற இருக்கிறது.

இதற்கிடையே பாகிஸ்தான் அணி பங்கேற்கும் சில போட்டி இடங்களை மாற்றுமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது.

அக்டோபர் 20 ஆம் திகதி பெங்களூருவில் நடை பெறும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி 23 ஆம் திகதி சென்னையில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளின் மைதானங்களை மாற்றுமாறு வலியுறுத்தியது.

ஆனால் பாகிஸ்தானின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தலைவர் பாபர் ஆசம் அளித்த பேட்டியில் தெரிவித்தது - இந்தியாவில் நடைபெறும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் எந்த இடத்திலும், எந்த அணியுடனும் விளையாட பாகிஸ்தான் அணி தயாராக இருக்கிறது.

உலக கிண்ணத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடி வெற்றி பெறுவது பற்றி மட்டும் சிந்திக்கவில்லை. ஒட்டு மொத்த போட்டியிலும் சிறப்பாக செயல் பட வேண்டும். ஐ.சி.சி. பட்டத்தை வெல்ல வேண்டுமானால் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும். அதில் கவனம் செலுத்துவோம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் என்ன நடக்கிறது என்பதில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்.

வரவிருக்கும் போட்டிகளின் முழு அட்டவணையும் எங்களிடம் உள்ளது. போட்டிகளில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.

இப் போட்டிகளுக்காக வீரர்கள் தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். உலக கிண்ண போட்டி எங்கு நடந்தாலும் அங்கு நாங்கள் விளையாட வேண்டும். எங்களுக்கு முன்னால் உள்ள சவால்களை எதிர்கொள்ள உற்சாகமாக இருக்கிறோம்.

பாகிஸ்தான் அணி தனது பலம் மற்றும் போட்டியை நடத்தும் நாடுகளின் நிலைமையை மனதில் கொண்டு ஆசிய கிண்ண மற்றும் உலக கிண்ணத்திற்கான திட்டங்களை வகுத்து வருகிறது. என்று பாபர் ஆசம் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.