மேலும் இரண்டு வகை மருந்துகள் நீக்கம்



அரசாங்க வைத்தியசாலைகளில் இருந்து 02 வகை எஸ்பிரின் மருந்துகளை விலக்கிக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, மருத்துவ வழங்கல் பிரிவு இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல அரசாங்க வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் எஸ்பிரின் மாதிரிகள் சமீபத்தில் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் பரிசோதிக்கப்பட்டது.

இதன்போது குறித்த 02 மருந்து வகைகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பந்தப்பட்ட அனைத்து எஸ்பிரின் மருந்துகளையும் அகற்றுமாறு மருத்துவ வழங்கல் பிரிவு அனைத்து வைத்தியசாலைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ள போதிலும் வைத்தியசாலைகளில் எஸ்பிரின் தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் கபில விக்ரமநாயக்க குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, சிறுநீரக நோயாளர்களின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஏவி ஃபிஸ்துலா எனப்படும் விசேட கெனுயூலர் வகையின் தரமற்ற பகுதியை அகற்றுவதற்கும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த கெனுயூலர் வகைகளில் பலவற்றில் கசிவு ஏற்பட்டுள்ளதால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வைத்தியசாலை அதிகாரிகளுக்கு மருத்துவ வழங்கல் பிரிவு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் தரவுகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.