சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச் சென்ற சிறுமிகள், துரத்திச் சென்று பிடித்த பெண் தாதி


சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற இரண்டு சிறுமிகளை துரத்திச் சென்று பிடித்துள்ளார் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவர்.


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



அக்குரஸ்ஸ சர்வோதய சுவசேத சிறுவர் இல்லத்தில் இருந்து இரண்டு சிறுமிகள் நேற்றுமாலை தப்பிச் சென்றுள்ளனர்.இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் 12, 13 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.



இவ்வாறு தப்பிச் செல்லும் போது இந்த இரண்டு சிறுமிகளும் சந்தித்துக் கொண்டுள்ளனர் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.



நேற்று (04) மாலை 6 மணியளவில், அக்குரஸ்ஸ வைத்தியசாலையின் தாதி ஒருவர், இந்த இரண்டு சிறுமிகளும் சாலையில் பதற்றத்துடன் நடந்து செல்வதை அவதானித்துள்ளார். செவிலியரைப் பார்த்ததும் இரண்டு சிறுமிகளும் ஒரே நேரத்தில் பிரதான வீதியில் நின்றிருந்த பேருந்தில் ஏறினர்.



சிறுமிகளின் செயற்பாட்டில் சந்தேகமடைந்த தாதி, அருகில் இருந்த முச்சக்கர வண்டியில் ஏறி, பேருந்தை துரத்திச் சென்ற போது, ​​அக்குரஸ்ஸ காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளார்.



அதன்படி அக்குரஸ்ஸ வைத்தியசாலைக்கு அருகாமையில் இருந்து சுமார் 4 கிலோமீற்றர் தூரத்தில் பயணித்த பேருந்தை காவல்துறை உத்தியோகத்தர் மற்றும் தாதி ஆகியோர் தடுத்து நிறுத்தி சிறுமிகள் இருவரையும் கைது செய்தனர்.



அங்கு 13 வயது சிறுமியிடம் அவர்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டபோதும் அவள் எதுவும் தெரிவிக்கவில்லை. அங்கு சிறுமி மயங்கி விழுந்ததால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இதேவேளை, அக்குரஸ்ஸ சர்வோதய சுவசேத சிறுவர் இல்லத்தின் விடுதிக்கு பொறுப்பான இருவர் சிறுமிகள் காணாமற்போனமை தொடர்பில் பல மணித்தியாலங்களின் பின்னர் அக்குரஸ்ஸ காவல்நிலையம் வந்து முறைப்பாடு செய்த நிலையில் வைத்தியசாலையில் இருந்த இரண்டு சிறுமிகளும் தமது விடுதியில் உள்ளவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.



சிறுவர் இல்லத்தின் விடுதி மேற்பார்வையாளர்கள் தமது கடமைகளை சரிவர செய்யாத காரணத்தினால் அவர்களை கடுமையாக எச்சரித்த காவல்துறை பொறுப்பதிகாரி மருத்துவப் பரிசோதனையின் பின்னர் சிறுமிகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.