வர்தமானியின்படி சுருக்கு வலைகளுக்கு  அனுமதி பத்திரம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கடற்தொழில் அமைச்சரிடம்  கோரிக்கை விடுத்தார்.திங்கள் இடம்பெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 
சுருக்கு வலை என்பது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நவீன மீன்பிடி முறையாகும். ஆனால் எம் மக்கள் மத்தியில் சுருக்கு வலை என்பது தடைசெய்யப்பட்ட தொழில் என்ற கருத்து நிலவுகிறது .உண்மையில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை எது? அங்கீகரிக்கப்பட்ட சுருக்கு வலை எது என்பது பற்றி இந்த சபையில் தெளிவு படுத்தப்படலாம் என நினைக்கிறேன்.
1986 ஆம் ஆண்டு சுருக்கு வலை தொடர்பான வர்தமானி அறிவித்தலின்படி 3/8 (0.375) அங்குல கண் அளவுக்கு மேற்பட்ட சுருக்கு வலைக்கு அனுமதி பத்திரம் வழங்கப்படலாம் என உள்ளது.அந்த வர்தமானியை இங்கு சமர்ப்பிக்கிறேன். ஆகவே வர்தமானி அறிவித்தலின்  படி 3/8 அங்குலத்துக்கு மேற்பட்ட கண் உள்ள வலைகள் அனைத்த்தும் சட்டரீதியான வலைகள். 
ஆனால் தற்போது 1.5 அங்குல கண் அளவுக்கு மேற்பட்ட வலைகளுக்கே அனுமதி பத்திரம் வழங்கப்படுகிறது.இதனால் 1.5 அங்குலத்துக்கு குறைவான வலைகள் தடைசெய்யப்பட்ட வலைகள் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது.அது தவறானது அதுபோன்று 3/8 அங்குலத்துக்கும் 1.5 அங்குலத்துக்கும் இடைப்பட்ட வலைகள் கடற்படை ,மீன்பிடி திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. 
1995 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுருக்கு வலை தொடர்பான திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுருக்கு வலையை அனுமதி பத்திரம் இல்லாமல் யாரும் பயன்படுத்த முடியாது என கூறப்பட்டுள்ளதை காரணம் காட்டி வர்தமானியின் படி அனுமதி வழங்கப்பட்ட சட்டரீதியான சுருக்குவலை மீன்பிடி  திணைக்களத்தால் அனுமதி பத்திரம் வழங்கப்படாததால்  மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் 13 இலட்சம் பெறுமதியான வலைகள் எரிக்கப்பட்டு அவர்களும் வழக்குகளுக்காக நீதிமன்றத்துக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. 
உண்மையில் வர்தமானி மூலம் அனுமதி வழங்கப்பட்ட வலைகளுக்கு அனுமதி பத்திரம் வழங்காதது யாரின் தவறு இது மீனவர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.ஆகவே இது தொடர்பாக அமைச்சர் உரிய தெளிவுபடுத்தலை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் 1.5 அங்குல சுருக்கு வலைகளுக்கான அனுமதி பத்திரத்தில் சில நிபந்தனைகள் உள்ளன.உண்மையில் அவை திருகோணமலைக்கு பொருத்தமில்லாத நிபந்தனைகளாகவும் காணப்படுகின்றன.7 கடல் மைல்களுக்கு அப்பால் சென்றே மீன் பிடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது.இந்த நிபந்தனை விதிக்க காரணம் தென் பகுதியில் ஏழு மைல்களுக்கு உள்ளே அதிக முருகை கற்பாறைகள் காணப்படுவதால் சுருக்கு வலை மூலம் அவை அழிவடைவதே தடுப்பதற்காக. 
ஆனால் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருகோணமையில் 7 மைல்களுக்கு உள்ளே அவ்வாறான முருகைக்கற்பாறை இல்லை அத்துடன் 1.5 அங்குல சுருக்கு வலை அலகொடுவா எனப்படும் சூறை மீன் பிடிப்பதற்கே பயன்படுத்தப்படுகிறது.பாறைகளில் உள்ள மீன்களை பிடிப்பதற்கு இவை பயன்படுத்தப்படுவதில்லை.   
உண்மையில் ஏழு மைல் என்பது திருகோணமலை யை பொறுத்தவரை நடைமுறை சாத்தியம் அற்றது. ஏன் எனில் கிண்ணியாவில் இருந்து ஏழு கடல் மைல் என்பது திருகோணமலையில் இருந்து மூன்று மைல்களாக இருக்கும். ஒருவர் கிண்ணியாவில் இருந்து ஏழு மைல்களுக்கு அப்பால் மீன் பிடிக்க செல்லும் போது அவர் திருகோணமலை கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்.ஆகவே திருகோணமலையின் பூகோல அமைப்பை கருத்தில் கொண்டு இந்த எல்லையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
அடுத்த நிபந்தனையாக வலையின் நீளம் 225 m உயரம் 25 M என, குறிப்பிடப்பட்டுள்ளது.உண்மையில் 225m வலையை பயன்படுத்தி சூறை மீனை பிடிக்க முடியாது.அவ்வாறு 225m வலையை பயன்படுத்தி சூறை மீன் பிடிக்க முடியும் என மீன்பிடி திணைக்கலாமோ NARA வோ கூறினால் அனுமதி பத்திரம் வழங்க முதல் அவர்கள் முதலில் திருகோணமலைக்கு வந்து அவர்கள் கூறும் வலையில் 100 கிலோ சூறை மீனை பிடித்து காட்டிவிட்டு இந்த நிபந்தனைகளை விதிக்கட்டும்.
இவ்வாறு நடைமுறை சாத்தியம் இல்லாத நிபந்தனைகளை விதித்து மீனவர்களை கைது செய்து அவர்களின் உடமைகளை அழிக்க இடமளிக்க வேண்டாம் என நான் கோரிக்கை விதிக்கிறேன்.
2019 ஆம் ஆண்டு முதல் இரவில் சுழியோடி (Diving) அட்டை பிடிப்பதற்கான அனுமதி பத்திரம் வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.உண்மையில் பகல் நேரங்களில் அட்டைகளை பிடிக்க முடியாது. அத்துடன் அட்டை ஏற்றுமதி நாட்டுக்கு டொலர் வருமானத்தை பெற்று தரும் துறையாகும்.ஆகவே எவ்வித விஞ்ஞான காரணமும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனுமதி பத்திரம் மீண்டும் வழங்கப்பட தேவையான நடவடிக்கைகளை அமைச்சர் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
Next
This is the most recent post.
Previous
பழைய இடுகைகள்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.