மலேசியாவில் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா புதிய மன்னராக பதவி ஏற்றார்.
மலேசியாவில் மன்னரின் முடியாட்சியின் கீழ், கூட்டாட்சி முறையிலான அரசியல் சட்டம் அமலில் உள்ளது.
அங்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மன்னர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மன்னர் தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், துணைப் பிரதமர் ஆகியோர் ஆட்சியை நிர்வகித்து வருகின்றனர். இந்த நிலையில், மலேசியா மன்னராக கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில் பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முகமது, தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த 6-ந் திகதி பதவி விலகினார். முன்னாள் ரஸ்ய அழகியை காதலித்து திருமணம் செய்துகொண்டதால் ஐந்தாம் சுல்தான் முகமது தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதனை தொடர்ந்து, மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா கடந்த வாரம் அரச குடும்பத்தின் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மன்னரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற விழாவில் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா மன்னராக பதவி ஏற்றார். அதே விழாவில் நாட்டின் துணை மன்னராக சுல்தான் நஸ்ரின் ஷா பதவி ஏற்றுக்கொண்டார்.
பதவி ஏற்பதற்கு முன்பாக சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா நாடாளுமன்றத்துக்கு சென்று பிரதமர் மகாதீர் முகமது மற்றும் துணை பிரதமர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோரை சந்தித்தார். அப்போது அவருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க, இசை வாத்தியங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. (நன்றி: தினத்தந்தி)