ஏ.ஏ.எம்.பாயிஸ்
பலாங்கொடை, ஜெயிலானி தேசியப் பாடசாலையின் முழுமையான வளர்ச்சிக்குத் தன்னாலான சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக, சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உறுதியளித்தார்.
பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி, நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஒரு நாட்டின், ஒரு குடும்பத்தின், ஒரு பாடசாலையின் வளர்ச்சிக்கு, தலைமைத்துவ ஆளுமைகளும் செயற்பாடுகளுமே காரணமாகின்றன என்றும் பாடசாலை அதிபரின் சிறந்த தலைமைத்துவத்தைத் தான் இங்கு காண்பதாகவும் தெரிவித்தார்.
இப்பாடசாலையை கொழும்பு றோயல், ஆனந்தா கல்லூரிகளின் மட்டத்துக்கு உயர்த்துவதே தனது இலக்கு என்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் இருக்கின்ற ஒரே தமிழ்மொழி மூலப் பாடசாலையான இதன் முழு வளர்ச்சிக்கு, தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்னும் சில வாரங்களில் பொதுத்தேர்தல் பணிகள் ஆரம்பிக்கவுள்ளன என்றும் அதன் பின்னர், பாடசாலை அபிவிருத்திக்கான பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

