பாதிக்கப்பட்ட சீன மக்களுக்கு இலங்கையின் அன்பளிப்பு

  Fayasa Fasil
By -
0
- மாணவர்களை அழைத்து வர உதவியமைக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு
- சீன வெளிவிவகார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நன்றி தெரிவிப்பு

பாதிக்கப்பட்ட சீன மக்களுக்கு இலங்கையின் அன்பளிப்பு-SL Gifts Teat to China
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீன மக்களுக்காக உலகப்புகழ் பெற்ற 'சிலோன் பிலெக் டீ' ஒரு தொகை நேற்று (06) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டது.
சீனத் தூதுவர் ஷேங் சியுவான் (Cheng Xueyuan) அவர்களிடம் இத்தேயிலை தொகுதி கையளிக்கப்பட்டது.
இக்கட்டான இச்சந்தர்ப்பத்தில் சீன அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இலங்கை அரசாங்கமும் நாட்டு மக்களும் வழங்கிய ஆதரவுக்கு சீன ஜனாதிபதி சீ ஜிங் பிங் மற்றும் சீன அரசாங்கத்தினதும் சார்பாக தூதுவர் நன்றியைத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வேண்டி கடந்த நாட்களில் பிரித் பாராயன நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமைக்காக அனைவருக்கும் தூதுவர் நன்றியைத் தெரிவித்தார்.
இதன்போது, வூஹானில் இருந்த இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்காக ஜனாதிபதி தூதுவருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
“இவர்கள் மாணவர்கள் என்றபடியால் அவர்களின் பெற்றோர் பாரிய மனவேதனைக்கு ஆளாகியிருந்தனர். மாணவர்களுக்கு வுஹானில் இருந்து வெளியேர அனுமதியளித்ததை உண்மையாகவே பாராட்டுகிறேன். இந்தப் பாதிப்பை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு சீனாவுக்கு முடியும் என நான் நம்புகிறேன்.” என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நோயைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் வினவியதற்கு பதிலளித்த தூதுவர், சீன புது வருட ஆரம்பத்துடன் வைரஸ் பற்றி அறியக்கிடைத்ததாக குறிப்பிட்டார். அதன் பயங்கர நிலையை உணர்ந்தவுடன் நோய் பரவுவதைத் தடுப்பதற்காக சீன அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. வைரஸ் பரவக்கூடிய அனைத்து இடங்களும் பூரண கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தூதுவர் குறிப்பிட்டார். மொத்த மரண எண்ணிக்கையில் 99% மாணவர்கள் வுஹான் நகரைச் சேர்ந்தவர்கள் என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.
சீன புது வருடம் இலங்கையில் விடுமுறை காலமாக இல்லாததால் இலங்கையில் வாழும் அதிகமான சீனர்கள் புது வருடத்தைக் கொண்டாட சீனாவுக்கு சென்று மீண்டும் இங்கு வருகை தரவில்லை. அவர்களிடம் இலங்கை வருவதை தாமதப்படுத்துமாறு கேட்டுக்கொள்வதுடன், இதுவரை மீண்டும் இங்கு வந்துள்ளவர்களிடம் தனிமையான இடத்தில் இருக்குமாறு கூறியுள்ளதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக சீனா மற்றும் சுற்றியுள்ள வலய நாடுகளில் பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு பாரிய தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. சுற்றுலா மற்றும் வணிக இழப்புக்கள் இலங்கையையும் பாதித்துள்ளது. புதிய வைரஸ் பற்றி ஆய்வுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான உடனடி தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடியும் என்று தூதுவர் மேலும் கூறினார்.


இதேவேளை இது தொடர்பில், தனது ட்விற்றரில் பதிவிட்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சின் தகவல் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர், இக்கட்டான சூழ்நிலையில் இலங்கையினால் வழங்கப்பட்டுள்ள இத்தேயிலை கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவுள்ளதாகவும், இலங்கை அரசு மற்றும் மக்களுக்கு சீனத் தூதுவர் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)