அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை - முடிவு விரைவில்

Rihmy Hakeem
By -
0
தனக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அதன் முடிவுகள் தெரியவரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் என்று ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் நிவாரண மசோதா குறித்து பேசினார். தேவைப்படும் அனைத்து அமெரிக்கர்களுக்கும் இலவசமாக கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதுவரை அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளதாக கூறிய டிரம்ப், மேலும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது என்று நினைக்கிறோம் என்றார். இது சீனாவில் இருந்து தொடங்கினாலும், இதற்காக யாரையும் குற்றம் சொல்ல முடியாது என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரிட்டனில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதோடு அங்கு பலியாோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் முதல் கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. 82 வயது மூதாட்டி ஒருவர் சனிக்கிழமை அன்று உயிரிழந்தார்.

ஆப்பிரிக்காவில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர்ந்து கொரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவின் மும்பையில் இருந்து ருவாண்டா சென்ற இந்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ருவாண்டாவின் அரசு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதோடு, பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதே போல ஆப்பிரிக்க நாடான நமிபியாவிலும் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

(அததெரண)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)