ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி ஒரே அணியாகவே போட்டியிடும் – இம்ரான்

Rihmy Hakeem
By -
0


ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி ஒரே அணியாகவே போட்டியிடும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை  மாலை கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்துள்ள கருத்து முரண்பாடு சிலரின் தனிப்பட்ட பிரச்சினையே தவிர அது ஐக்கிய தேசிய கட்சியின் பிரச்சினை அல்ல. அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளால் கட்சியை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்வதை ஒரு போதும் அனுமதிக்கமுடியாது. இதுவே கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நிலைப்பாடு. எனவே எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி ஒரே அணியாகவே போட்டியிடும். இதுபற்றி யாரும் அச்சப்பட தேவையில்லை.

இந்த அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறி நூறுநாட்கள் கடந்துவிட்ட போதும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அவர்களால் இன்னும்  நிறைவேற்ற முடியவில்லை. மார்ச் முதலாம் திகதிமுதல் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என்றார்கள், ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு என்றார்கள், பட்டதாரிகளுக்கு நியமனம் என்றார்கள். ஒன்றுமே நடக்கவில்லை.

ஐக்கிய தேசிய முன்னணியின் நூறுநாள் திட்டத்தில் பெற்றோலின் விலை குறைத்தோம், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தோம், பல்கலைகழக மாணவர்களுக்கான மஹபொல புலமைபரிசிலை அதிகரித்தோம் ,பொருட்களின் விலை குறைத்தோம்.

ஆகவே இந்த நூறு நாட்களில் இந்த அரசு தோற்றுவிட்டது. அவர்களால் சொல்ல முடியுமே தவிரே அவற்றை ஒரு நாளும் செயற்படுத்த முடியாது காரணம் அவர்கள் இன்று சர்வதேசத்தின் மத்தியில் தனிமைப்பட்டுகொண்டு வருகிறார்கள்.

நிலைமை இவ்வாறே நீடித்தால் மீண்டும் இலங்கை 1970ஆம் ஆண்டு யுகத்தை நோக்கி பின்னோக்கி பயணிக்கும் சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)