தேசிய இனப்பிரச்சினைக்காக புதிய அரசாங்கம் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவை நிச்சயமாக அமைக்கும் என நம்புவதாக லங்கா சமஜ கட்சியின் செயலாளரும் ஆளுநருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த மஹிந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்காக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டது.
அதில் பல கட்சிகள் அங்கம் வகித்தன.
தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்காக பல தடவைகள் கூடி தீர்க்கமான யோசனைகளும் முன்வைக்கப்பட்டன. அதன் பின்னர் யோசனை நகல் ஒன்றை தயாரித்து இருந்தோம். அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மட்டும் பங்குபற்றி இருக்கவில்லை.
தமிழ் மக்களின் தீர்வில் உண்மையான அக்கறை இருந்திருந்தால் அதில் பங்கு பற்றி தமது யோசனைகளையும் முன் வைத்திருப்பார்கள். அவர்களுக்கு தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் உண்மையாக அக்கறை இல்லை என்றே நான் கருதுகின்றேன்.
இவ்வாறான நிலையில் தற்போது தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தீர்வு தொடர்பில் மக்களிடம் பேசி வருகின்றனர்.
புதிய அரசாங்கம் தீர்வு காணும் செயற்பாட்டில் ஈடுபடும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் நிச்சயமாக பங்குபற்ற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
என்னைப் பொருத்தவரையில் 13ஆவது திருத்தச் சட்டமூலம் மாற்றப்படக்கூடாது , நாம் 13ஆவது திருத்தச் சட்டத்தை பாதுகாத்து பலப்படுத்த வேண்டும் இதுவே எனது நிலைப்பாடு என்றார்.