அவுஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18-ம் திகதியில் இருந்து நவம்பர் மாதம் 15-ம் திகதி வரை நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இரண்டு முறை ஐசிசி இதுகுறித்து முடிவு எடுக்க முடியாமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒத்தி வைத்தது.
இதற்கிடையில் தற்போதுள்ள சூழ்நிலையில் டி20 உலக கிண்ணத்தை நடத்துவதற்கு சாத்தியம் இல்லை என்று அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. டி20 உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலக்கட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்தது.
ஐபிஎல் குறித்து முடிவு எடுக்க முடியாத அளவிற்கு ஐசிசி தலைவர் ஷசாங்க் மனோகர் தடைபோட்டு வருவதாக பிசிசிஐ அதிகாரிகள் குற்றம்சாட்டினர். ஷசாங்க் மனோகர் கடந்த வாரம் தனது பதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில் ஐசிசி கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. அப்போது டி20 உலக கிண்ணத்தை தொடரை ஒத்திவைப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். அவர்கள் செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெடிற்கு தயாராகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைப்பு உறுதியாகியுள்ளது.