- ஐ. ஏ. காதிர் கான் -
( மினுவாங்கொடை நிருபர் )
கம்பஹா உள்ளிட்ட பல பிரதேசங்களில், அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பாவனையாளர் அதிகார சபையின் கம்பஹா மாவட்ட இணைப்பு அதிகாரி அறிவித்துள்ளார்.
முட்டைக்கான நிர்ணய விலையினை, பாவனையாளர்கள் அதிகார சபை விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிட்டுள்ளது.
வெள்ளை நிற முட்டை 43 ரூபாவும், பழுப்பு நிற முட்டை 45 ரூபாவுக்கு விற்பனை செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், அதி கூடிய விலைக்கு முட்டையினை விற்பனை செய்தல், விலைப்பட்டியல்களை காட்சிப்படுத்தாமை போன்றவற்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது, இது தொடர்பில் கம்பஹா மாவட்ட வர்த்தகர்களுக்கு, பாவனையாளர்கள் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் ஊடாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என மேலும் தெரிவித்தார்.