'வளமான நாடு - அழகான வாழ்க்கை' எனும் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, டிஜிட்டல் ஆளுமையை நோக்கிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை ஊழியர் சேமலாப நிதியம் (EPF) எடுத்துள்ளது.
இதன் ஒரு அங்கமாக, ஊழியர் சேமலாப நிதியத்தின் பல்வேறு சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் 'டிஜிட்டல் ஈ.பி.எப்' (Digital EPF) மென்பொருள் நேற்று (29) உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
Link - https://labourdept.gov.lk/digital-epf/
கொழும்பிலுள்ள தொழிலாளர் செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வு, தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் நடைபெற்றது.
வீட்டிலிருந்தே சேவைகளைப் பெற வாய்ப்பு
இந்த புதிய மென்பொருள் அறிமுகத்தின் மூலம், முதலாளிமார்கள் மற்றும் ஊழியர்கள் தொழிலாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது. அத்தியாவசியமான பல சேவைகளை இணையவழியாக (Online) மிக இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
வழங்கப்படவுள்ள முக்கிய சேவைகள்:
- புதிய நிறுவனங்களை பதிவு செய்தல்.
- பதிவுகளைப் புதுப்பித்தல்.
- ஊழியர்களுக்கான விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பித்தல்.
- புகைப்படங்களை பதிவேற்றுதல்.
- B-கார்டுகளை (B-Cards) பெற்றுக்கொள்ளுதல்.
- ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்.
மேற்குறிப்பிட்ட அனைத்துச் சேவைகளையும் முதலாளிமார்கள் மற்றும் ஊழியர்கள் தத்தமது அலுவலகங்களில் அல்லது வீடுகளில் இருந்தபடியே இணையதளம் ஊடாக மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் தொழிலாளர் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் நதீகா வத்தலியத்த மற்றும் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

