ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அத்தனக்கல்ல பிரதேச சபை உறுப்பினர் தாவூத் மக்பூல் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அத்தனக்கல்ல பிரதேச சபையினால் திஹாரிய வாரன வீதிப் பகுதியில் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
வாரன வீதியில் ஜெயவர்த்தன மாவத்தை தொடக்கம் லாபிர் ஹாஜியார் மாவத்தை வரையிலான வடிகான்கள் நீண்டகாலமாக கழிவுகள், ஊத்தைகள் மற்றும் மணல் படிவுகளால் நிரம்பிக் காணப்பட்டன. இதனால் அப்பகுதியில் வியாபாரத்தில் ஈடுபடும் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.
இந்தச் சூழலில், பிரதேச சபை உறுப்பினர் மக்பூல் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, தவிசாளரின் உத்தரவின் பேரில் பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் கனரக வாகனங்களின் உதவியுடன் வடிகான்கள் முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டன.
இப்பணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் ஊடகத்துறைச் செயலாளரும், அத்தனக்கல்ல பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட பட்டியல் வேட்பாளருமான றியாஸ் முஹம்மட் அவர்கள் மிகவும் உறுதுணையாகச் செயற்பட்டார். தவிசாளர் மற்றும் பொறுப்பான அதிகாரிகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளை மேற்கொண்டு, தேவையான கனரக வாகனங்கள் மற்றும் ஆளணி வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதில் அவர் திறம்படச் செயற்பட்டதாகப் பாராட்டப்பட்டது.
இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, அப்பகுதி கடை உரிமையாளர்கள், மரக்கறி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், உறுப்பினர் மக்பூல் மற்றும் றியாஸ் முஹம்மட் ஆகியோரின் மக்கள் பணியினையும் வெகுவாகப் பாராட்டினர்.
கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அத்தனகல்ல பிரதேச சபையில் தராசு சின்னத்தில் போட்டியிட்டு இரு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தகவல் : சலீம் மீரா சாஹிபு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் திஹாரிய
மத்திய குழு ஊடகப்பிரிவு






