தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு பல நாட்கள் சிறையில் இருந்ததன் பின்பு விடுதலை செய்யப்பட்டார்கள். இவர்களின் விடுதலைக்கு எந்த அரசியல்வாதிகள் அதிகமாக உழைத்தார்கள் என்ற பட்டிமன்றத்தினை காணக்கூடியதாக இருந்தது. 

மாணவ சமூகம் என்பது ஒரு நாட்டினதும், அந்நாட்டில் உள்ள சமூகங்களினதும் பலமுள்ள சக்திகளாகும். அவர்கள் போராட வீதியில் இறங்கினால் அதனை கட்டுப்படுத்துவதென்பது மிகவும் கடினமானது. 

மாணவர்களின் போராட்டங்களினால் பல நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றது.

இலங்கையில் ஜேவீபீ கலவரங்கள் நடைபெற்றபோது ஜேவீபி யினர்களின் போராட்டத்தின் பின்னணியில் தென் இலங்கையில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்புக்கள் அதிகமாக இருந்தது.

அதுபோல் தமிழீழ விடுதலை போராட்டத்தின் பிறப்பிடமாகவும், தமிழ் அரசியல்வாதிகளுக்கு பின்புலமாகவும், போராட்ட இயக்கங்களின் முதுகெலும்பாகவும் யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர்கள் செயல்பட்டிருந்தார்கள்.

ஆனால் எமது தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் மேலே கூறப்பட்டவற்றுக்கு முற்றிலும் மாற்றமான மனோநிலையில் காணப்படுகின்றார்கள்.

அதாவது போராட்ட குணம் இல்லாதா அப்பாவிகளாக காணப்படுவது வேதனை தருகின்றது.

தனது சக மாணவர்கள் கைது செய்யப்பட்டதானது ஓர் அரசியல் நோக்கம் கொண்டது என்பது எல்லோருக்கும் தெரிந்தவிடயம்.

ஆனால் அம்மாணவர்களை விடுதலை செய்யகோரி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற எந்தவொரு முஸ்லிம் மாணவர்களும், அமைப்புக்களும் போராட்டம் நடாத்தவில்லை.

போராட்டம் என்னும்போது இவர்களை ஆயுதம் ஏந்தி போராடுமாறு கூறவில்லை. குறைந்தது அரசாங்கத்தின் கவனத்தினை ஈர்ப்பதற்கான ஆர்ப்பாட்டங்களாவது செய்திருக்கலாம்.

அவ்வாறு செய்கின்றபோது இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பலபாகங்களில் இருந்தும் விடுதலைக்கான அழுத்தங்கள் வழங்கப்பட்டிருக்கும்.

இதனால் ஆட்சியாளர்கள் அச்சப்பட்டிருப்பார்கள். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த அரசியல் தலைவர்களுக்கு இலகுவாக இருந்திருக்கும்.

இதே நிலைமை சிங்கள, தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்டிருந்தால் இன்று நாட்டின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று நான் கூறத்தேவையில்லை.

பட்டம் பெற்று, தொழில் எடுத்து பின்பு கொளுத்த சீதனதம் வாங்கிக்கொண்டு நல்லதொரு இடத்தில் திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலாகிவிட வேண்டும் என்ற சுயநலத்தினை தவிர, வேறு சமூக நோக்கு எதனையும் அம்மணவர்களிடம் காணமுடியவில்லை.

ஆனால் அங்குள்ள சிங்கள மாணவர்களோ ஒவ்வொரு நாளும் போர் முரசு கொட்டுகிறார்கள்.

சாப்பாட்டுக்குள் உப்பு கூடினாலும் வளாகத்தினை முற்றுகையிட்டு கொண்டு நடாத்தும் போராட்டத்தினால் முழு பல்கலைக்கழகமே ஸ்தம்பிதம் அடைகின்றது.

எனவே தங்களது நண்பர்கள் கைது செய்யப்பட்டதற்கே போராட்டம் நடாத்தி அவர்களது விடுதலைக்காக அழுத்தம் வழங்க முயற்சிக்காத எமது மாணவர்கள், ஒருபோதும் எமது சமூக உரிமைக்காக போராட்டம் நடாத்துவார்கள் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது.

இவர்கள் அனைத்து விடயங்களுக்கும் அரசியல்வாதிகளையே நம்பியுள்ளார்கள். அரசியல்வாதிகளால் ஒரு குறிப்பிட்ட எல்லையை தாண்டி எதுவும் செய்யமுடியாது.   

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.