ஏற்றுமதிக்கான மீன் தொடர்பில் மீன் வளர்ப்பிற்கான இடங்களை பெற்றுக் கொள்வதில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வினைப் பெற்றுத் தருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தெரிவித்தார்.
அப்பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பொறுப்புக் கூறவேண்டிய அதிகாரிகளுடன் பேசி இதற்கு தீர்வு காணவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறியது, நேற்றைய தினம் (19) நடைபெற்ற மீன் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுடனான சந்திப்பின் போதாகும்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மீன் ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், அலங்கார மீன் ஏற்றுமதியாளர்கள், கடற்றொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி டப்ளியூ.பீ.சந்தநாயக்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள், கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகள், தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகார சபையின் (NAQDA) தலைவர் நுவன் பிரசன்ன மதவன் ஆரச்சி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மீன் ஏற்றுமதியாளர்கள், தமது ஏற்றுமதியில் அரசு விதிக்கும் இலக்கினை அடைய தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தனர். அதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் விளக்கிய போது அவற்றை ஒவ்வொன்றாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தெரிவித்தார்.
ஏற்றுமதிக்கான அனுமதி கிடைப்பதில் ஏற்படும் கால தாமதம் தொடர்பில் அறிந்து கொண்ட இராஜாங்க அமைச்சர், விமான நிலையத்தில் இருக்கும் காரியாலய வசதியை மேம்படுத்தி இந்தப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
கடற்றொழில் அமைச்சு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களிலுள்ள அதிகாரிகள் சகல நிர்ப்பந்தங்களில் இருந்தும் விடுவிப்பு
சகல அதிகாரிகளும் யாருடைய கட்டளையினது கீழும் இல்லை. அவ்வாறு இதன் பிறகும் அச்சுறுத்தல்கள் மற்றும் நிர்ப்பந்தங்கள் ஏற்படின் தமக்கு அறிவிக்குமாறு இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி கோரிக்கை விடுத்தார்.
இதன் போது ஏற்றுமதியாளர்கள் குறிப்பிட்டது, சென்ற காலங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது செயலாளர்கள் அனுமதி தரும் வரை அதிகாரிகளுக்கு அனுமதிப்பத்திரங்களில் கையெழுத்திடும் அதிகாரம் இருக்கவில்லை. அந்த நிலைமையிலிருந்து விடுவித்ததற்கு ஏற்றுமதியாளர்கள் இராஜாங்க அமைச்சருக்கு நன்றி கூறியதுடன், எதிர்காலத்தில் அவ்வாறு ஏற்படாமல் இருக்க சிறந்த முறைமை ஒன்றையும் அறிமுகப்படுத்துமாறு மேலும் கேட்டுக்கொண்டனர்.
அதன் படி ஒவ்வொரு மாதத்திற்கும் ஒருமுறை மீன் ஏற்றுமதி – இறக்குமதியாளர்கள், அலங்கார மீன் வளர்ப்பாளர்கள், உள்ளிட்ட பலரையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கும் இச்சந்திப்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.



ரிஹ்மி ஹக்கீம்,
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.