தற்போது மாலைதீவில் கைது செய்து, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 25 இலங்கை மீனவர்களையும் விடுவிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்திருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தெரிவித்தார்.

எதிர்வரும் சில நாட்களில் அந்த மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வர முடியும் என்றும் அவர் தெரிவித்தார். படகு உரிமையாளர்கள் மற்றும் கைதான மீனவர்களின் உறவினர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சில் இராஜாங்க அமைச்சரை (13) சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அந்த மீனவர்களை விடுவிப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கதைத்து இராஜ தந்திர மட்டத்தில் செய்ய முடியுமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார். அதன்படி பிரதமர் அவர்கள் மாலைதீவு உயர்மட்டத்தினருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் இலங்கை மீனவர்கள் இரு நாட்களில் விடுவிக்கப்பட இணக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி மேலும் தெரிவித்தார்.

மீனவர்களுடன் அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன், அண்மையில் அரபுக் கடல் பிரதேசத்தில் மீன் பிடிக்கச் சென்று இலங்கை திரும்பிக் கொண்டிருந்த மீனவர்களை மாலைதீவு அதிகாரிகள் இரு படகுகள், பிடிக்கப்பட்ட மீன்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுடன் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.



✍🏻சரத் சந்த்ரசிறி (ஊடக செயலாளர்)
✍🏻ரிஹ்மி ஹக்கீம் (முகாமைத்துவ உதவியாளர்)
🇱🇰கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சு

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.