இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மூன்று உறுப்பினர்கள் அமோக வெற்றியீட்டியதையிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அக்கட்சியின் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனுடன் இன்று (24) தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழ்நாடு, இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள கே. நவாஸ்கனியுடனும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கேரளா மாநிலத்தில் பொன்னனி தொகுதியில் ஈ.ரி.எம். பசீரும், மலப்புரம் தொகுதியில் பி. குஞ்சாலிக்குட்டியும் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றதுக்கு தெரிவானதையிட்டு கட்சித் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீனிடம் அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இலங்கையின் தற்போது நிலவிவரும் நெருக்கடி நிலைமை குறித்து கேட்டறிந்துகொண்ட பேராசிரியர் காதர் மொகிதீன், அமைச்சரிடம் தனது ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டதோடு, நிலைமை விரைவில் சீராக இறைவனை பிரார்த்திப்பதாகவும் கூறினார்.
முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக விரைவில் தமிழ்நாட்டுக்கு வருகைதரவுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம், தலைவருடன் வெற்றிபெற்றவர்களை நேரில் சந்தித்து பரஸ்பரம் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழக அரசியலில் கருணாநிதி – ஜெயலலிதா தசாப்தங்களின் பின்னர் அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று தி.மு.க. கோலோச்சும் நிலைமைக்கு உயர்ந்துள்ளதாகவும், இலங்கையுடனான உறவுகளை வளர்ப்பதற்கு வாய்ப்பு கிட்டுமென நம்புவதாகவும் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது வாழ்த்துக்களை டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.