முஸ்லிம் அமைச்சர்களின் ராஜினாமால் வியாளேந்திரன் அடைந்த நண்மை என்ன ? இதனை தமிழ் மக்கள் புரிந்துகொள்வார்களா ?

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு வியாலேந்திரனின் அரசியல் நடவடிக்கைகள் மிகவும் கவலை தருகின்றது. ஒற்றுமையாக இருக்கின்ற தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் பகைமை உணர்வினை ஏற்படுத்தி அதில் அரசியல் இலாபம் அடைய முற்படுவதனை காணக்கூடியதாக உள்ளது.

தமிழர்களின் அரசியல் பிரதிநிதியான தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கையினால் கட்டியமைக்கப்பட்டது. அக்கட்சியில் உள்ளவர்கள் ஒருபோதும் அற்ப சலுகைக்காக அதாவது பணத்துக்காகவும், பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் சோரம்போனதில்லை. அவ்வாறு சோரம்போனவர்கள் மிகவும் அரிது.

அந்தவகையில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு பியசேன அவர்கள் மகிந்த ராஜபக்சவிடம் சோரம்போனதனால், அவரது அரசியல் வாழ்வு அஸ்தமித்தது.

அதாவது தமிழர்களுக்கு பேரவலத்தை ஏற்படுத்தி புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கு காரணமாக இருந்த மகிந்தயோடு சேர்ந்ததுதான் அவர் தமிழ் மக்களுக்கு செய்த பாரிய துரோகமாககும்.

அதுபோல் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 52 நாட்கள் அரசியல் புரட்சியின்போது அற்ப சலுகைக்காக திரு வியாளேந்திரன் அவர்கள் அதே மகிந்தவுடன் சேர்ந்து தனது கட்சிக்கு துரோகம் செய்தார்.

திரு பியசேன அவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை தனக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் திரு வியாளேந்திரன் களத்தில் இறங்கியுள்ளார். அதற்காக அவர் கையில் எடுத்துக்கொண்ட துரும்புதான் முஸ்லிம் விரோத பிரச்சாரமாகும்.

ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கிழக்கு மாகான ஆளுநராக பதவி ஏற்றதிலிருந்து அவரது நியமனத்துக்கு எதிராக பொங்கியெழுந்தார்.

திரு வியாளேந்திரன் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதனால் இருவருக்குமிடையில் அரசியல் உரசல்கள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஹிஸ்புல்லாஹ்வை அவர் விமர்சித்தபோது முஸ்லிம்கள் அதனை கண்டுகொள்ளவில்லை.

ஆனால் அமைச்சர் றிசாத் பதியுதீன், மேல்மாகாண ஆளுநர் ஆசாத் சாலி அவர்களுக்கு எதிராக சிங்கள இனவாதிகள் கிளர்ந்தெழுந்தபோது, சிங்கள இனவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து திரு வியாளேந்திரன் உண்ணாவிரதம் இருந்ததன் மூலம் தனது சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக கொலை செய்த இனத்துக்கு ஆதரவு தெரிவிப்பதன்மூலம் தனது இனத்துக்கு தான் துரோகம் செய்வதனை தமிழ் மக்கள் அறியாமல் இருக்கமாட்டார்கள்.

இன்று ஹிஸ்புல்லாஹ், றிசாத் பதியுதீன், ஆசாத் சாலி ஆகியோர் மட்டுமல்ல அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினமா செய்துள்ளார்கள். இந்த பதவி துறப்பால் தமிழ் மக்கள் அடைந்த இலாபம் என்ன ? இதனை திரு வியாளேந்திரனால் அம்மக்களுக்கு விளக்க முடியுமா ?

தமிழ் மக்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் உள்ளது. எத்தனையோ இளைஞ்சர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் சிறைகளில் வாடுகின்றார்கள். அவ்வாறான பிரச்சினைகளுக்காக உண்ணாவிரதம் இருந்தால் அதனை பாராட்டி இருக்கலாம்.

ஆனால், தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்காக இரு சமூக தலைமைகளும் செயலாற்றி வருகின்ற நிலையில்,

திரு வியாளேந்திரன் அவர்கள் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்று தனது சுயநல அரசியலை தக்கவைத்துக் கொள்வதற்காக முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் மக்களை தூண்டும்விதமான அரசியலை கையில் எடுத்துள்ளார். இது மிகவும் ஆபத்தானவை. இதில் இரு சமூகத்தவர்களும் விழிப்பாக இருப்பதுதான் மிகவும் ஆரோக்கியமானது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.