முஸ்லிம் பெண்கள் அணிகின்ற அபாயாவுக்கு தடையாக அரச அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கான சீருடை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள பொதுநிர்வாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் சுற்றுநிருபத்தை வாபஸ் பெறுவதாகவும் அபாயாவுக்கு தடை ஏற்படாத வகையிலான புதிய சுற்றுநிருபத்தை எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடுவதாகவும் பொதுநிர்வாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இராஜாங்க அமைச்சர் ஹரீஸிடம் உறுதியளித்துள்ளார்.

பொதுநிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அரச அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கான சீருடை தொடர்பான சுற்றுநிருபம் முஸ்லிம் பெண்கள் அணிகின்ற அபாயாவை தடை செய்வதாக அமைந்துள்ளமை தொடர்பாக பொதுநிர்வாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பேசியபோதே மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.

குறித்த சுற்றுநிருபத்தினால் முஸ்லிம்கள் கொதிப்படைந்துள்ளதாக அமைச்சர் மத்தும பண்டாரவிடம் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அபாயா தொடர்பான தெளிவுபடுத்தல்களையும் வழங்கினார்.

தன்னுடன் ஆலோசனை செய்யாமல் பொதுநிர்வாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் தீர்மானித்து அச்சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை அச்சுற்று நிருபத்தை மாற்றி அபாயா அணிவதற்கு தடை ஏற்பாடாதவகையிலான சுற்று நிருபத்தை வெளியிடவுள்ளதாகவும் இதன்போது அமைச்சர் மத்தும பண்டார உறுதியளித்தார்.

- ஊடகப் பிரிவு -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.