இலங்கையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இனவாத வன்முறைகள் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு தாக்கங்களை கொண்டுள்ளது என, இலங்கையிலுள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு 
 மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களும், உயர்ஸ்தானிகர்களும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த சில நாட்களாக வளர்ந்து வரும் நிலையானது, சில வெளிநாட்டு முஸ்லிம் அகதிகள் உள்ளடங்கலாக, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு தொடர்பில் பார்க்கும்போது மிகவும் கவலைக்குரியதாக இருக்கின்றது.

முஸ்லிம்களது உள்ளுர் கடைகள், பெரிய வியாபார நிலையங்கள் உள்ளடங்களாக முஸ்லிம்களின் உயிர்கள், வாழ்வாதாரங்கள் என்பன எதிர்பாராத ஆபத்தான விளைவுகளைக் கொண்ட தற்போதைய சூழ்நிலையால் அச்சுறுத்தப்பட்டுள்ளன.

அரசியல் ரீதியாக ஊக்குவிக்கப்படும் அச்சுறுத்தல்கள், ஆத்திரமூட்டல்கள் குறித்து இலங்கை முழுவதுமுள்ள முஸ்லிம் சமூகம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. இதை நேற்று மாலை தனது இப்தார் வரவேற்பு உரையில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

இலங்கையின் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கிராமத்தில் நடைபெறும் சிறிய சம்பவம் கூட, பதிவு செய்யப்பட்டு, பரவலான வன்முறை மற்றும் எதிர் வன்முறையை தூண்டும் வகையில், பெரும் தொகையினர் பார்க்கும் வகையில் இணையத்தளத்தில் பரவவிடப்படலாம் என்பது எம் அனைவருக்கும் தெரியும்.
ஏனையோரை பூதாகரப்படுத்தி, வெளித்தள்ளும் தற்போதைய பிரிவினை, வெறுப்பு பேச்சானது இந்த மோசமான நிலையை தீர்ப்பதற்கு உதவாது. மாறாக, அதை இன்னும் மோசமாக்கும். இது நமது பொது அக்கறைக்கு காரணமாக அமைய வேண்டிய ஒரு விடயமாகும்.

இலங்கையின் நீண்ட கால நண்பர்கள் என்ற வகையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் இராஜதந்திர பிரதிநிதிகள், இலங்கை மக்களுக்கு மத்தியில் சமாதானம், ஸ்திரத்தன்மை, நல்லிணக்கத்தை ஊக்குவிக்கின்றனர். அத்தோடு, வேற்றுமையில் ஒற்றுமையை காணும்படி அவர்களை நாம் கோருகின்றோம்.

இது ஏனையோரை நோவினை செய்யாத ஒரு பாரம்பரியத்தை வளர்க்கின்ற சகிப்புத்தன்மை கொண்ட, சமாதானத்தை விரும்பும் ஒரு நாடாக இலங்கையின் கவர்ச்சிக்கு அடித்தளமிடும்.
எனவே, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளாகிய நாம், இனவாத வன்முறைகளை தடுப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், குற்றவாளிகள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தபோதும், அவர்கள் இலங்கை சமூகத்தில் செலுத்தும் அரசியல் செல்வாக்கைப் பொருட்படுத்தாமல், அவர்களுக்கு எதிராக துரிதமான, உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நட்பு நாடான இலங்கை அரசிடம் வலியுறுத்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.