முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்கின்ற திருத்த யோசனையை வன்மையாக கண்டிக்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ்  பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்ட தேர்தல் வெட்டுப் புள்ளியினை அதிகரித்தல் சம்பந்தமான அரசியல் திருத்த யோசனைக்கு எதிராக பாராளுமன்ற விவாதத்தில் இன்று (8) கலந்து கொண்டு உரையாற்றும் போது முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹரீஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்...

பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவின் நோக்கம் 1988ம் ஆண்டு திருத்தப்பட்ட 12.5 வீத வெட்டுப்புள்ளி 5 வீதமாக குறைக்கப்பட்டதன் காரணமாக இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை கட்சிகளான ஜேவிபி, ஹெல உறுமய, தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் அதே போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு என பல கட்சிகள் ஜனநாயக நீரோட்டத்தில் இருந்து கொண்டு தங்களுடைய பாராளுமன்ற ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்பு இலகுவாக்கப்பட்டது.

இதனால் இந்த நாட்டில் பாராளுமன்ற ஜனநாயகம் மிகவும் உயிர்த்துடிப்புடன் நிலைநாட்டப்பட்டது. ஆனால் இன்று தன்னுடைய ஏகாதிபத்திய கொள்கையின் அடிப்படையில் இந்த பாராளுமன்றத்தை இன்று சிறுபான்மையின சிறுகட்சிகளின் பிரதிநிதித்துவதை இல்லாமல் செய்து ஒரு சர்வாதிகார ஆட்சியை இந்த நாட்டில் உருவாக்குவதற்காக குறிப்பாக நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முஸ்லிம் சமூகத்தின் குரல்வளையை நசுக்கி பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்கின்ற ஒரு நாசகார எண்ணத்தின் அடிப்படையில் இந்த திருத்த யோசனையை முன்வைத்ததை இட்டு நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

அதே நேரம் நேற்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அவர்கள் இந்த நாட்டின் உளவுப் பிரிவு தலைவர் ஒரு முஸ்லிம் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு எதிராக போராடுகின்ற சூழ் நிலையில் எவ்வாறு ஒரு முஸ்லிமை நியமிக்க முடியும் என்று இந்த நாட்டில் இருக்கின்ற இருபது இலட்ச முஸ்லிம்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தி உள்ளார்.இது மிகவும் வெட்கக்கேடான விடயமாகும்.

எனவே இவ்வாறான சமூக இன ஐக்கியத்திற்கு எதிரான கருத்துக்களை கண்டிப்பதோடு அதே நேரம் இன்று அத்துரலிய ரத்ன தேரர் அவர்கள் இந்த நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்கவேண்டும் என்கின்ற பிரேரனையை சமர்ப்பித்துள்ளார்.இது இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் அச்சத்தையும்,பீதியையும் ஏற்படுத்தி இருக்கின்ற நடவடிக்கைகளாக இதனை நாங்கள் பார்க்கின்றோம். என்பதோடு இதனை இந்த உயர் சபையில் வன்மையாக கண்டிக்கின்றேன்.இவ்வாறான நடவடிக்கைகளை இனிமேல் இவர்கள் நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

- ஊடகப் பிரிவு-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.