( மினுவாங்கொடை நிருபர் )

   ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  தேசியப் பட்டியல் ஊடாக தனக்கு  பாராளுமன்றம் செல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளதாக, முன்னாள் பேருவளை நகரபிதாவும், அரச ஹஜ் கமிட்டித் தலைவருமான மர்ஜான் பழீல் உறுதிப்படுத்தியுள்ளார். 

   இந்த முடிவு,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ் ஆகியோரினால் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

   இது தொடர்பில்,  உத்தியோகபூர்வமாக தனக்கு (14) சனிக்கிழமையன்று  அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

   இதனைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையான ஆதரவாளர்கள் தனது  இல்லத்தில் (14)  ஒன்று திரண்டு, தனக்கு முழு அளவிலான ஆதரவுகளையும் உளம் நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தங்களது பூரண ஒத்துழைப்புக்களை தொடர்ந்து வழங்குவதாக இதன்போது அவர்கள் தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

   இங்கு ஆதரவாளர்கள் மத்தியில் மர்ஜான் பழீல் கருத்துத் தெரிவிக்கும்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ், தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ் ஆகியோரிடத்தில் எவ்வித இனவாதங்களுக்கும் இல்லை என்பதை இது  எடுத்துக்காட்டுகிறது. முஸ்லிம்களுடன் சிநேகிதமாகப் பழகும் இவர்களை, இனவாதக் கண்கொண்டு பார்ப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

   பழீல் ஹாஜியாரின் 35 வருட அரசியல் வாழ்க்கைக்கும், அதனைத் தொடர்ந்து நாம் ஆற்றிய சிறந்த சமூகப்  பணிகளுக்கும்  கிடைத்த பரிசு என, இதனைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எனது தந்தை பழீல் ஹாஜியார், தனது அரசியல்  வாழ்க்கையில்  ஆழ்ந்த சிந்தனையாளராகத் திகழ்ந்தார். ஒரு நொடிப்பொழுதேனும் பிசகாமல், கட்சி மாறாமல் இறுதி வரை செயற்பட்டார். 

அனைவருடனும் எல்லா சந்தர்ப்பத்திலும் தோழோடு தோழ் நின்று செயற்பட்டவர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் குடும்பத்தினருடன் அவருடைய இறுதி மூச்சு வரை நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் நடந்துகொண்டவர். இதனால்தான், அந்த நன்றி உணர்வை மறவாமல், இவ்வாறானதொரு சிறப்புக் கைங்கரியத்தை மேற்கொள்ளத் தீர்மானித்து, அவர்கள் எனது தந்தையாரையும், என்னையும், எனது கட்சி ஆதரவாளர்களையும் கெளரவித்துள்ளனர். இதற்கு நான் எனது பேருவளை தொகுதி வாழ் மக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் சார்பாக இவர்களுக்கு  நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.