ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு 22 மில்லியன் யூரோ நிதி உதவி

Rihmy Hakeem
By -
0
கொவிட் 19 தொற்று பரவுவதை தடுப்பதில் இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவ முன்வந்துள்ளது.
இதன் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் சுகாதாரம் விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகிய மூன்று துறைகளில் உதவுவதற்காக 22 மில்லியன் யுரோக்களை மானியமாக வழங்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையில் தற்போது வரை, மிகக் குறைந்தளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும் எனவும், இலங்கையின் முயற்சியை பாராட்டும் வகையில் நாட்டின் சுகாதாரம், விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்நிதி வழங்கப்படுதவாக அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரான்ஸ் ஜேர்மன் நெதர்லாந்து இத்தாலி (France, Germany, Italy, the Netherlands, Romania)  ஆகிய நாடுகளின் தூதுவர்கள் பெசில் ராஜபக்ஸ தலைமையிலான ஜனாதிபதியின் விசேட செயலணி உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது இந்த விடயங்களை குறிப்பிட்டனர்.
சுகாதார நடவடிக்கைகளுக்காக, 2 மில்லியன் யூரோக்களுக்கான உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து உபகரணங்கள் மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்யவும் ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்துவதற்கும் வழங்குவதாக தெரிவித்துள்ளது.
அத்துடன், விவசாய நடவடிக்கைகளுக்காக 16.5 மில்லியன் யூரோக்களை ஒதுக்குவதாகவும், அது தற்போதைய நிலையில், விற்பனை மற்றும் விநியோக சங்கிலியை பலப்படுத்த உதவும் என்பதோடு, நாட்டின் சனத்தொகையின் நலனுக்கான விவசாயம் மற்றும் சுகாதார நலன் கொண்ட விநியோகங்களுக்காக பயன்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
அத்துடன் 3.5 மில்லியன் யூரோக்களை, சுற்றுலாத் துறைக்கு வழங்குவதாகவும், குறிப்பாக சிறிய சேவை வழங்குனர் மற்றும் அவர்களின் ஊழியர்களுக்காக இது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு சில உதவிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் ஏனையவை ஆண்டின் இறுதிப் பகுதியிலும் அதனைத் தொடர்ந்து வரும் காலப் பகுதியிலும் மேற்கொள்ளப்படும் என, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)