-பா.நிரோஸ்
அரச நிதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சர்வாதிகாரமாகப் பயன்படுத்த முடியாதெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, அரசமைப்பை மீறி அரசாங்கம் செயற்படுவதாகச் சாடினார்.
ஜனாதிபதியின் நாடாளுமன்றக் கலைப்புத் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை சட்டவலுவற்றதாக அறிவிக்கக் கோரி சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும், உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றை நேற்று முன்தினம் (05) தாக்கல் செய்தது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்தோடு, பொதுத் தேர்தலுக்கான திகதியாக ஜூன் 20ஆம் திகதி குறிக்கப்பட்டுள்ளது எனினும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
ஆனால் அரசாங்கம், அரசமைப்பு முறைக்கு முரணாகச் செயற்பட்டு வருகிறது. 2020ஆம் ஆண்டுக்கான இடைக்காலக் கணக்கு அறிக்கையே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 30ஆம் திகதியுடன் அந்தக் காலம் நிறைவடைகின்றது என்றும் கூறிய அவர், நிதி தொடர்பான அதிகாரங்கள் நாடாளுமன்றுக்குக் காணப்படுகின்ற நிலையில், கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியால் அரச நிதியைச் சர்வாதிகாரமாகப் பயன்படுத்த முடியாதெனவும் கூறினார்.
இதன்படியே உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அரசமைப்பின்படி செயற்பட வேண்டுமென்றே தாம் உயர்நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.