கே.எல்.ரி.யுதாஜித்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர் நியமனங்களை மீள வழங்குமாறு, அகில இலங்கை பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே அச்சங்கம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அகில இலங்கை ரீதியாக பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர் நியமனங்கள் 6,547 பேருக்கு, கடந்த அரசாங்கத்தால் 2019.09.16 அன்று வழங்கப்பட்டன.  
“இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைக் காரணமாகக் கொண்டு, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவால் இந்நியமனங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக, அனைத்து மாவட்டச் செயலகங்களுக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது.
“ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதி 2019.09.18 ஆகவும், நியமனம் வழங்கப்பட்ட திகதி 2019.09.16 ஆகவும் அமைந்திருந்தமையை இங்கு கருத்தில்கொள்ள வேண்டும்.
“ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்த பின்னர்,  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட எமது பணிகளை மீளத் தொடர்வதற்கு 2019.11.18 அன்று நாங்கள் மாவட்டச் செயலகங்களுக்குச் சென்றிருந்தோம்.
“தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரால், எமது நியமனம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிகத் தடையுத்தரவு நீக்கப்பட்டு, மீண்டும் பணியை தொடர கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
“இருப்பினும், தற்போதைய அரசாங்கத்தால் நியமனம் குறித்த ஒரு தகவலும் வழங்கப்படவில்லை எனக் கூறி, நியமனங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்வதாக, நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
“பின்னர் பயிலுநர் செயற்றிட்ட உதவியாளராகிய நாங்கள் அனைவரும், நிதியமைச்சு, பிரதமர் காரியாலயம், ஜனாதிபதி செயலகம் என்பவற்றுக்குப் பல தடவைகள் சென்று, கோரிக்கைக் கடிதங்களைக் கொடுத்தோம்.
“இறுதியாக எங்களுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்பின் கீழ், இந்த நியமனங்களைத் தருவதாகக் கூறினர். ஆனால், அதுவும் நடக்கவில்லை. இதனால் 6,547 பேரின் வாழ்ககை,  சுமார் 08 மாதங்களாக வேலையின்றிக் கேள்விக்குறியாகியுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.