பதினேழாவது தொடர்....................

ஈரான் மீதான ஆக்கிரமிப்பு தோல்வியும், அமெரிக்க படைகளை மத்தியகிழக்கில் நிலைநிறுத்தும் யூதர்களின் தந்திரமும்

ஈரானுக்கு எதிராக சதாம் ஹுசைன் மேற்கொண்ட படையெடுப்பானது எட்டு வருடங்கள் நீடித்தது. கடந்த நூற்றாண்டின் மிக நீண்ட யுத்தமாக ஈரான் - ஈராக் யுத்தம் கருதப்படுகின்றது.

இந்த யுத்தத்தில் ஈரான் தனிமைப்படுத்தப்பட்டது. முஸ்லிம் நாடுகளில் பெரும்பாலானவை சதாம் ஹுசைனுக்கு ஆதரவளித்தன. அத்துடன் அமெரிக்காவின் பலத்த ஆதரவும், உதவியும் சதாமுக்கு இருந்தது.

சதாம் ஹுசைனின் படையெடுப்பின் ஆரம்பத்தில் ஈரான் பல பிரதேசங்களை இழந்திருந்தும், இமாம் கொமைனி அவர்களின் தலைமைத்துவ வழிகாட்டலினால் தனித்துநின்று உறுதியுடன் போரிட்டது. ஆரம்பத்தில் இழந்த அனைத்து பிரதேசங்களையும் 1982 இல் ஈரான் மீளக் கைப்பேற்றியது.

அர்த்தமில்லாத ஈரான் - ஈராக் யுத்தத்தில் இருதரப்பிலும் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். இதில் சதாமினால் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. பின்பு ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டினால் 1988 ஆகஸ்டில் யுத்தம் முடிவுக்கு வந்தது.

அமெரிக்காவும் யூதர்களும் எதிர்பார்த்ததுபோன்று இந்த யுத்தத்தில் ஈரானை ஆக்கிரமிக்க முடியவில்லை. மாறாக ஈரான் இராணுவரீதியில் தன்னை பலப்படுத்திக் கொண்டதுடன் நீண்ட யுத்த அனுபவத்தையும் பெற்றுக்கொண்டது.

அதுபோல் சதாம் ஹுசைனும் தன்னை பலப்படுத்திக்கொண்டார். ஈரான் மக்களை கொன்று அந்நாட்டை ஆக்கிரமிப்பதற்காக சதாம் ஹுசைனுக்கு நவீன ஆயுதங்களும், ஏவுகணைகளையும், இரசாயன ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கியிருந்தது.

சதாம் ஹுசைன் மூலமாக ஈரானை அழிப்பதற்கு அமெரிக்காவும், யூதர்களும் போட்ட திட்டம் தோல்வியடைந்ததனால் 1988 இல் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடையினை விதித்தது. அன்று விதிக்கப்பட்ட பொருளாதார தடையானது கட்டம் கட்டமாக அதிகரிக்கப்பட்டு இன்று வரைக்கும் அது அமுலில் உள்ளது.

ஈரான் இஸ்லாமிய புரட்சிக்கு தலைமை தாங்கிய அந்நாட்டின் தலைவர் இமாம் ரூஹுல்லாஹ் கொமைனி அவர்கள் 1989 இல் மரணமடைந்தார்.

அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாகவும், உலக முஸ்லிம்களின் கதாநாயகனாகவும் அப்போது திகழ்ந்த இமாம் கொமைனி அவர்களின் மரணத்துக்கு பின்பு முஸ்லிம் உலகின் கதாநாயகனாக சதாம் ஹுசைன் விளங்கினார். சதாம் ஹுசைனின் வளர்ச்சி சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகளுக்கு பிடிக்கவில்லை.

1989 ஆம் ஆண்டு மத்தியகிழக்கில் பெரும் அமைதி நிலவியது. பாலஸ்தீன் பிரதேசத்தை தவிர வேறு எந்த பிரதேசத்திலும் யுத்தம் நடைபெறவில்லை. இது யூதர்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணியது.

ஈரான் மீதான சதாம் ஹுசைனின் படையெடுப்பு வெற்றியடைந்திருந்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ஈரானை மீட்பது என்ற போர்வையில் இரண்டு திட்டங்களை அமெரிக்காவும், யூதர்களும் நடைமுறைப்படுத்தி இருப்பார்கள்.

அதாவது இஸ்ரேலின் மேலதிக பாதுகாப்புக்காக மத்தியகிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க படைகளை நிரந்தரமாக நிலைநிறுத்துதல். மற்றும் இயற்கை வளங்கள் அதிகமாக உள்ள ஈரானை ஆக்கிரமித்து வளச்சுறண்டல்களை மேற்கொள்ளுதல் என்பதுதான் அந்த திட்டமாகும்.

அது தோல்வியடைந்ததனால் அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொண்டார்கள்.. அதாவது எவர் மூலமாக எமது திட்டம் தொல்வியடைந்ததோ, அவர் மூலமாக அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொண்டார்கள். அதுதான் குவைத் மீதான ஆக்கிரமிப்பாகும்.

ஈரானுடன் ஈராக்குக்கு எல்லை பிரச்சினை இருந்ததுபோன்று குவைத்துடனும் எல்லை பிரச்சினை இருந்தது. அதனால் குவைத்தை ஆக்கிரமிப்பதற்கு சதாம் ஹுசைன் தூண்டப்பட்டார்.

யூதர்களின் திட்டத்தினையும், இதனால் வரப்போகும் ஆபத்துக்களையும் பற்றி சிந்திக்காமல் அமெரிக்காவை முழுமையாக நம்பியதனால் 1990 ஆகஸ்ட் 02 இல் குவைத்தை ஈராக்கிய படைகள் ஆக்கிரமித்ததுடன், குவைத்தானது ஈராக்கின் ஒரு மாநிலமாகவும் சதாம் ஹுசைன் அறிவித்தார்.

குவைத்மீதான சதாமின் படையெடுப்பினால் முதலில் மகிழ்ச்சி அடைந்தவர்கள் யூதர்கள். மத்தியகிழக்கில் அமெரிக்க படைகளை காலூன்ற செய்தல் என்ற யூதர்களின் நீண்டகால திட்டத்தை அமுல்படுத்துவதற்கான காலம் கணிந்ததுதான் அவர்களது மகிழ்ச்சிக்கு காரணமாகும்.

குவைத்திலிருந்து ஈராக்கிய படைகள் எந்தவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விலகிக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோஜ் புஷ் அறிவித்தவுடனேயே சதாம் ஹுசைன் அதிர்ச்சியடைந்தார். ஏற்கனவே தயார்நிலையில் இருந்த அமெரிக்க படைகள் உடனடியாக மத்தியகிழக்கை நோக்கி விரைந்தன.

அமெரிக்கா தலைமையில் 28 நாடுகள் கூட்டணி அமைத்து சதாமுக்கு எதிராக யுத்தம் செய்ய தயாரானார்கள். இந்த யுத்தத்துக்கான மொத்த செலவு 60 வில்லியன் அமெரிக்க டொலராகும். இதில் 40 வில்லியன் டொலரை சவூதி அரேபியா வழங்கியது.

ஈரானுக்கு எதிரான யுத்தத்தில் யாரெல்லாம் தனக்கு நண்பர்களாக இருந்தார்களோ அவர்களெல்லாம் தனக்கு எதிராக போரிட தயாரானதை பார்த்து சதாம் அதிர்ச்சியடைந்தார். உண்மையான நண்பன் யார் எதிரி யார் என்பதை சதாம் புரிந்துகொண்டார்.

அத்துடன் தன்னை இவ்வளவு காலமும் யாரெல்லாம் இயக்கினார்கள் என்றும் இதன் பின்னணியில் இருந்த யூதர்களின் அரசியல் விளையாட்டுக்களையும் சதாம் விளங்கிக்கொண்டதுடன், ஈரானிடம் மன்னிப்புகோரினார்.

ஏனெனில் எட்டு வருகால யுத்தத்தில் பதட்டமாக இருந்த ஈரானிய நீண்ட எல்லைப்பிரதேசமே தற்போது சதாமுக்கு பாதுகாப்பான பிரதேசமாக தெரிந்தது. ஈராக்கை சுற்றியுள்ள ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் அமெரிக்காவினதும் அதன் நேச நாட்டு படைகளாலும் முற்றுகையிடப்பட்டிருந்தது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

தொடரும்.......................................

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.