ஜூன் மாதம் 29 ஆம்திகதி முதல் 04 கட்டங்களின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரும தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக அனைத்து பாடசாலைகளின் விடுமுறைகள் நிறைவுக்கு வருவதாக கல்வி அமைச்சர் கூறினார்.
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை 4 கட்டங்களாக மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
முதல் கட்டமாக ஜுன் மாதம் 29ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி ஊழியர்களே பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும். இதன் போது பாடசாலைகளில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜூலை 6 ஆம் திகதி முதல் பாடசாலை திறக்கப்பட்டு மூன்று கட்டங்களாக கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று தெரிவித்த அமைச்சர் இதற்கமைவாக ஜூலை 06 ஆம் திகதி தரம் 5 தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய மாணவர்களுக்காக பாடசாலை 2ஆம் கட்டமாக திறக்கப்பட உள்ளது.
மூன்றாம் கட்டமாக ஜூலை மாதம் 20 ஆம் திகதி தரம் 10 மற்றும் தரம் 12 ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும். நான்காம் கட்டமாக முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களை தவிர்ந்த 3, 4, 6, 7, 8,மற்றும் 9 தர மாணவர்களுக்காக பாடசாலை ஜுலை மாதம் 27 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. செப்டம்பர் 7 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்..
தரம் 1 மற்றும் தரம் 2 வகுப்பு மாணவர்களை பாடசாலைக்குஅழைப்பது தொடர்பில் இதுவரை தீரமானம் மேற்கொள்ளப்படவில்லையென்றும் கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரும மேலும் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.