(செ.தேன்மொழி)

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் இல்லாததனால் , அதனை மறைப்பதற்காக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரை கொண்டு சர்ச்சைக்குரிய கருத்துகளை பரப்பி உண்மை பிரச்சினைகளை அரசாங்கம் மறைக்க முற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை ஆளும் தரப்பினர் அரசயந்திரத்தை பயன்படுத்தி தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்படுவதாகவும் , இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் கவனம் செலுத்துவதுடன் முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி தேர்தல் பிரசார காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற வில்லை. இதனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக வாக்களித்த மக்கள் இன்று இவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விரக்தி அடைந்துள்ளனர்.

இதனால் ஜனாதிபதி தேர்தலில் இவர்களுக்கு கிடைக்கப் பெற்ற வாக்குகளில் 10 இலட்சம் வாக்குகளை இம்முறை இழப்பார்கள் என்று புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

ஊடகங்கள் முன்னிலையில் வெறுமனே கருத்து தெரிவிப்பதை விடுத்து அரச இயந்திரத்தை பயன்படுத்தி ஆளும்தரப்பினர் முன்னெடுக்கும் சட்டமீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேள்வி : முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தினதேரர் மத்ரசா பாடசாலைகளை முடாவிட்டால் , முஸ்லீம் வர்த்தக நிலையங்களை புறக்கணிப்பதாக தெரிவித்திருக்கின்றார் இது தொடர்பான உங்களின் கருத்து என்ன?

பதில் : தற்போதைய அரசாங்கம் இனவாதத்தை போஷித்தே ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொண்டதே , அதனையே பொதுத் தேர்தலிலும் மேற்கொண்டு வருகின்றது. தான் சுயாதீன போட்டியாளர் என்று ரத்தினதேரர் கூறிக்கொண்டாலும் , அவர் ஜனாதிபதி கோத்தாபயவுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வருகின்றார்.

இவ்வாறான கருத்துகளை கூறி , அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெறாத வாக்குகளை அவர் பெற்று அரசாங்கத்திற்கு பலத்தை பெற்றுக் கொடுக்கவே முயற்சிக்கின்றார்.

நாட்டில் யுத்தமொன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது அனைத்தினமக்களும் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியிருந்தோம்.

தற்போது யுத்தம் முடிவுற்று அனைவரும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்ற நிலையில் , ஒரு தேரர் என்ற வகையில் இவர் நாட்டில் ஐக்கியத்தையோ , நல்லிணக்கத்தையோ ஏற்படுத்தும் வகையில் எதுவும் கூறாது , இன பேதமான கருத்துகளை கூறி மீண்டும் நாட்டில் அழிவுகளை ஏற்படுத்தவா முயற்சிக்கின்றார்?

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.